உள்ளூர் செய்திகள்
சைக்கிள் உதிரி பாக கடை உரிமையாளரை வேலைக்கு அழைத்த பிச்சைக்காரன்

தினமும் ரூ.2000 சம்பளம் தருகிறேன் - சைக்கிள் உதிரி பாக கடை உரிமையாளரை வேலைக்கு அழைத்த பிச்சைக்காரன்

Published On 2022-05-12 04:21 GMT   |   Update On 2022-05-12 06:33 GMT
என்னோடு பிச்சை எடுக்க வா, உனக்கு தினமும் ரூ.2000 சம்பளம் தருகிறேன் என சைக்கிள் உதிரிபாக கடை உரிமையாளரை பிச்சைக்காரர் அழைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம்  வெள்ளகோவில் கடைவீதியில் ஏராளமான நபர்கள் தினமும் பிச்சை எடுப்பது வழக்கம். இந்நிலையில் சாட்டையால் அடித்துக் கொண்டு பிச்சை எடுத்த நபர் ஒருவர்  சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைக்கு சென்று  பிச்சை கேட்டுள்ளார்.

அப்போது அந்தக் கடையின் உரிமையாளர் கை, கால்கள் நன்றாக தானே இருக்கிறது, என் கடைக்கு வேலைக்கு வா சம்பளம் தருகிறேன் என கூறி உள்ளார். சம்பளம் எவ்வளவு தருவாய் என அந்த பிச்சை எடுக்கும் நபர் கேட்ட போது, 400 ரூபாய் ஒரு நாளைக்கு தருகிறேன் என கூறி உள்ளார்.

அதற்கு அந்த பிச்சை எடுத்த நபரோ 400 ரூபாய்க்கு நான் வேலை செய்ய வேண்டுமா? நான் ஒரு நாளைக்கு ரூ.2000 சம்பாதிக்கிறேன் என ஏளனமாக பதில் அளிக்கிறார். அதற்கு உரிமையாளர் இப்படி ஓசியில் பணம் கொடுத்தால்  நீ சம்பாதிக்க தான் செய்வாய் என கூறுகிறார்.

அப்போது பிச்சை கேட்ட நபர்,  பிச்சை கொடுப்பதாக இருந்தால் இருக்கு என சொல்லுங்கள், இல்லை என்றால் இல்லை என சொல்லுங்கள். நீ என்னோடு பிச்சை எடுக்க வா, உனக்கு  ரூ.2000 தருகிறேன் எனக்கூறியபடி அந்த பிச்சை எடுக்கும் நபர் அங்கிருந்து செல்கிறார். கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகிய இந்த காட்சிகள் தற்போது  சமூக வலைதளங்களில்  வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News