உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் மாநகரில் கூடுதலாக 13 இடங்களில் 52 கேமராக்கள் அமைப்பு
தனியார் பங்களிப்புடன் 52 சி.சி.டி.வி. கேமராக்கள் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தது.
திருப்பூர்:
கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிக்க ‘சி.சி.டி.வி.’ கேமராக்கள் போலீசாருக்கு பெரும் உதவியாக உள்ளது.
இதனால் திருப்பூர் மாநகரில் பிரதான ரோடுகள், முக்கிய சந்திப்பு, மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ‘சி.சி.டி.வி.’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மாநகரில் கூடுதலாகவும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் மாநகரில் நடந்த நகை கொள்ளை சம்பவம், வாலிபரை தலையை துண்டித்து கொலை செய்த வழக்கு, அசாம் மாநில பெண்ணை கொன்று ‘சூட்கேசில்’ அடைத்து சாக்கடை கால்வாயில் வீசி சென்ற வழக்கு என 3 வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து பிடிக்க போலீசாருக்கு பெரும் உதவியாக ‘சி.சி.டி.வி’ கேமரா இருந்தது.
இந்தநிலையில் தனியார் சார்பில் ரூ. 17 லட்சம் மதிப்பில் 52 ‘சி.சி.டி.வி.’ கேமராக்கள் வழங்கப்பட்டன.
இவை திருப்பூர் தெற்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மாநகராட்சி சந்திப்பு, வளம் பாலம், தென்னம்பாளையம், பழைய பஸ் நிலையம், சி.டி.சி., கார்னர் என 13 இடங்களில் பொருத்தும் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.
தற்போது முழுமையாக இப்பணி முடிந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது.
திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் 2 எல்.இ.டி., பொருத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் சி.சி.டி.வி., கேமராக்களை வழங்கியவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி தெற்கு போலீஸ் நிலையத்தில் நடந்தது.
துணை கமிஷனர் ரவி, உதவி கமிஷனர் வரதராஜன், இன்ஸ்பெக்டர் பிச்சையா, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.
கேமராக்களை வழங்கிய சண்முகம், சாதிக் அலி ஆகியோரை போலீசார் கவுரவித்து நன்றி தெரிவித்தனர்.