உள்ளூர் செய்திகள்
குழாயர் குழ பெண்கள், தங்களின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுக்கு மாலை அணிவித்து மேள, தாளத்துடன் அழைத்து வந்தனர்.
திருப்பூர்:
பல்லடம் தாலுகா அய்யம்பாளையத்தை சேர்ந்த, கொங்கு வேளாளர் மரபின் குழாயர் குல பெண்கள், திருமணம் ஆகி பல்வேறு பகுதிகளில் வசித்தாலும், ஆண்டுக்கு ஒரு நாள் ஒரே இடத்தில் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து தங்களது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களை குடும்பத்துடன் வரவழைத்து மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சூலுார் அடுத்த ஆச்சான் குளம் வேடசாமி கோவிலில் ‘நம்ம வீட்டு உறவு திருவிழா’ நடந்தது.குழாயர் குழ பெண்கள், தங்களின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுக்கு மாலை அணிவித்து மேள, தாளத்துடன் அழைத்து வந்தனர். பெரியவர்களுக்கு பாதபூஜை செய்து ஆசி பெற்றனர்.
பிறந்த வீட்டினரிடம் சீர்வரிசைகளை பெற்றுக்கொண்ட பெண்கள், சிறுவர், சிறுமியர் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.தொடர்ந்து உறவுகள் புடை சூழ, வேடசாமி கோவிலில், பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
இளைய தலைமுறையினர் நிகழ்வுகளை ஆச்சரியத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.
முன்னோர்கள் வகுத்த ஆலய வழிபாடு, பிறந்த வீட்டு சீர் வரிசைகள், பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் மரியாதை செய்தல் உள்ளிட்ட பண்பாட்டு, கலாசார வழக்கங்களை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் இவ்வகை விழாக்கள் நடத்தப்படுவதாக விழாவில் பங்கேற்ற பெரியவர்கள் தெரிவித்தனர்.