அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா இந்து அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான பி.கே. சேகர்பாபு ஏற்பாட்டில் கடந்த மாதம் 27-ந்தேதி முதல் 12-ந்தேதிவரை நலத்திட்ட உதவிகள் வழங்கும் மனித நேய திருநாளாக கொண்டாடப்பட்டது.
முதல் கட்டமாக 35 மனித நேய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரண்டாம் கட்டமாகவும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த வரிசையில் மாணவமாணவிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி ஆனந்தவேலு தெரு மான் போர்ட் பள்ளி வளாகத்தில் நடந்தது. கலாநிதி வீராசாமி எம்.பி முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மற்றும் கல்வி உதவி தொகைகள் வழங்கினார்.
அமைச்சர் சேகர்பாபு, புனிதவதி எத்திராஜன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா ராஜன், தாயகம் கவி எம்.எல்.ஏ, தமிழ்வேந்தன், சாமிக்கண்ணு, மா. ருத்ர மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அயனாவரத்தில் தயாநிதி மாறன் முன்னிலையிலும் லதா வாசு தலைமையிலும் நடந்த கோலப்போட்டியை தி.மு.க கொள்கை பரப்பு இணை செயலாளர் புதுக்கோட்டை விஜயா தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் சேகர்பாபு, வெற்றி அழகன் எம்.எல்.ஏ, ப.ரங்கநாதன், வே.வாசு, கூ.பி.ஜெயின், டி.வி.செம் மொழி, ச.மனோகரன், சி.விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.