உள்ளூர் செய்திகள்
பண்டாரவாடை-தேவராயன்பேட்டை சாலையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மெலட்டூர்:
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் தேவராயன் பேட்டை கிராமத்தில் இருந்து பண்டாரவாடை செல்லும் சாலையில் 3 கிலோ மீட்டர் தூரம் வரையிலான சாலைகள் பல வருடமாக புதுப்பிக்கப்படாமலும், தெரு விளக்குகள் அமைக்கப்படாமலும் உள்ளது.
அதனால் இந்த சாலையை பயன்படுத்தும் தேவராயன்பேட்டை புலியமங்கலம், பொன்மான்மேய்ந்த நல்லூர், சோலைபூஞ்சேரி, கிடங்காநத்தம், கோடுகிளி உள்பட பல கிராம மக்கள் இரவு நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்த கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த இரு மினி பஸ்கள் நிறுத்தப்பட்டு ஆறுமாதத்திற்கு மேலாகியும் இன்னும் பஸ்கள் இயக்கப்படாததால் இந்த கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பாபநாசம் மற்றும் பிற பகுதிக்கு நடந்தே சென்று வருகின்றனர்.
குறிப்பாக கல்லூரி, மற்றும் பிற பணிக்கு சென்று மாலைநேரத்தில் திரும்பும் பெண்கள் தெருவிளக்கு இல்லாத இந்த சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்த சாலையில் இரவு நேரங்களில் விஷமிகள் சிலர் சாலையில் அமர்ந்து மது அருந்துவதால் இந்த சாலையில் பெண்கள் செல்லவே அச்சம் கொள்கின்றனர். அதிகாரிகள் பண்டார வாடையில் இருந்து தேவராயன்பேட்டை வரை தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.