உள்ளூர் செய்திகள்
கொள்ளை

தூத்துக்குடியில் கணவருடன் சென்ற பெண்ணிடம் ரூ.2½ லட்சம் நகை பறிப்பு

Published On 2022-03-29 09:30 GMT   |   Update On 2022-03-29 09:30 GMT
தூத்துக்குடியில் கணவருடன் சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் ரூ.2½ லட்சம் மதிப்பிலான நகையை பறித்துச் சென்றுள்ளனர்.
முள்ளக்காடு:

தூத்துக்குடி முத்தையா புரம் அருகே உள்ள ராஜூவ் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 50).

இவர்கள் கோவை செல்வதற்காக நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்திற்கு சென்றனர். அவர்கள் முத்தையாபுரம் உப்பாற்று ஓடை பகுதியில் சென்ற போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென தம்பதி சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.

பின்னர் வெள்ளையம்மாள் கழுத்தில் கிடந்த 7½ பவுன் தங்க செயினை பறித்தனர். அதன் மதிப்பு ரூ. 2½ லட்சம் ஆகும். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கத்தி கூச்சலிட்டனர். எனினும் நகை பறித்த நபர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

உடனடியாக தம்பதி முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் யார்? என விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர். இது தொடர்பாக அப்பகுதியினர் கூறும் போது, வழிப்பறி சம்பவம் நடந்துள்ள பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் தூத்துக்குடி- திருச்செந்தூர் பிரதான சாலையாகும். சமீபகாலமாக முத்தையாபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து காணப்படுகிறது.

இதுவும் கொள்ளை போன்ற குற்றச்செயல்கள் நடைபெற வழிவகுக்கிறது. எனவே கஞ்சா விற்பனையை தடுத்து உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News