உள்ளூர் செய்திகள்
லாரி மோதி பலியான ஆடுகள்

நெல்லை அருகே இன்று காலை லாரி மோதி 26 ஆடுகள் பலி

Published On 2022-03-23 08:05 GMT   |   Update On 2022-03-23 08:05 GMT
நெல்லை அருகே லாரி மோதி 26 ஆடுகள் பலியான சம்பவம் குறித்து டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியை அடுத்த நடுக்கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் ஏராளமான ஆடுகள் வளர்த்து வருகிறார்.

இன்று காலை இவர் சுமார் 100 ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார். கல்லூர் ரெயில்வேகேட் அருகே ஆடுகளை கொண்டு சென்ற போது, அந்த வழியாக வந்த மணல் லாரி வேகமாக வந்து ஆடுகள் கூட்டத்தில் புகுந்தது.

இதில் லாரி சக்கரத்தில் சிக்கி ஏராளமான ஆடுகள் துடிதுடித்து இறந்தன. மேலும் ஏராளமான ஆடுகள் சிதறி ஓடியது.

இந்த சம்பவத்தில் 26 ஆடுகள் உடல் நசுங்கி பலியானது. சாலையில் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் ஆடுகள் இறந்து கிடந்த காட்சி, காண்போர் மனதை உருக்கியது. சுமார் 15-க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்தன. இதைப்பார்த்த ஆட்டு உரிமையாளர் நாகராஜன் கதறித்துடித்தார்.

அவரது சத்தத்தை கேட்டு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் விரைந்து வந்து ஆட்டு கூட்டத்திற்குள் புகுந்த லாரியை செல்லவிடாமல் மடக்கிப்பிடித்தனர்.

சம்பவ இடத்திற்கு சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் ஜீன்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் திரேசா மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காயமடைந்த ஆடுகளை குணமாக்க உடனடியாக கால்நடை மருத்துவரை வரவழைத்து சிகிச்சை கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இது குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News