உள்ளூர் செய்திகள்
தென்காசி நெடுஞ்சாலை பணிகள் நடக்கும் பகுதியில் மண்மூட்டைகளை வைக்க கோரிக்கை
தென்காசி மாவட்டம் எல்லைப்புளி முதல் மாதாபுரம் வரையிலான நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் நடக்கும் பகுதியில் விபத்துகளை தவிர்க்க மண் மூட்டைகளை வைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கோட்டை:
தென்காசி-அம்பை வழியாக நாள்தோறும் இரவு, பகலாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
தென்காசி மாவட்ட நெடுஞ்சாலையில் பெரும்பாலான பகுதிகளில் குறுகலான சாலையாக உள்ளதால் வாகன போக்குவரத்து தடை ஏற்படாமல் இருக்க சாலையை விரிவுபடுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில் எல்லைப்புளி முதல் மாதாபுரம் வரையிலான சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையை விரிவுப்படுத்தும் பணிக்காக சுமார் ரூ. 175 லட்சம் மதிப்பீட்டில் சாலையை அகலப்படுத்தி விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இச்சாலையில் அகலப்படுத்திய பகுதிகளில் வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ள வைக்கப்படும் மண்மூட்டைகள் குறைந்த அளவிலேயே வைக்கப் பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் தெரு விளக்குகளும் இல்லாத சூழ்நிலையில் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் சாலை விரிவாக்கத்திற்கான பள்ளங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
எனவே விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அந்தப்பகுதியில் ஒளிரும் ஸ்டிக்கர் பதாகை வைக்கவும் கூடுதலாக சாலை விரிவாக்க பகுதியில் மண்மூட்டைகள் வைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.