உள்ளூர் செய்திகள்
ஓலா

தாம்பரம், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் பயணிகளை அலையவிடும் ஓலா வாகன ஓட்டிகள்

Published On 2022-03-19 11:39 GMT   |   Update On 2022-03-19 12:32 GMT
பயணிகளின் நெருக்கடியை கவனத்தில் கொண்டு தனியார் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கேட்கிறார்கள். வேறு வழியில்லாமல் பயணிகளும் கேட்ட கட்டணத்தை கொடுத்து தங்கள் பயணத்தை தொடருகிறார்கள்.


வாடகை வாகன பயணத்தை எளிமையாக்கவும், கட்டண கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், ஓலா, உபர் போன்ற ஆன்-லைன் வாகன முன்பதிவை நிறுவனங்கள் வாடகை கார், ஆட்டோ சவாரிக்கு புதிய நடைமுறையை அமல்படுத்தின.

எந்த இடத்தில் இருந்தும் செயலி மூலம் செல்லும் இடத்தை பதிவு செய்து காரையோ, ஆட்டோவையோ புக்கிங் செய்துவிடலாம். செல்லும் இடத்திற்கான பயண கட்டணமும் செல்போனில் வந்துவிடும். அந்த வாடகையையும், பணமாகவோ, டிஜிட்டல் முறைப்படியோ செலுத்தி விடலாம். உள்ளூர் பயணிகள் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளும் இந்த செயலிகள் மூலமாகவே வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி தங்கள் பயணங்களை தொடங்குகிறார்கள்.

குறிப்பாக சென்ட்ரல், தாம்பரம் ரெயில் நிலையங்களில் ஏராளமான வெளியூர் பயணிகள் வருகிறார்கள். தனியார் ஆட்டோக்களில் சென்று பேரம் பேசுவதை தவிர்க்க பெரும்பாலான பயணிகள் ஓலா ‘ஆப்’ மூலமே பதிவு செய்கிறார்கள்.

நெரிசல் நிறைந்த காலை, மாலை நேரங்களில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் கேட்டு தொல்லை கொடுக்கிறார்கள். அதற்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் புக்கிங் செய்ததை ரத்து செய்து விடுகிறார்கள். இப்படியே பலரது அலைக்கழிப்பால் பெரும் சிரமத்தை பலரும் அனுபவித்து வருகிறார்கள்.

இன்று காலையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நன்மங்கலம் செல்ல ஓலா ஆட்டோ கட்டணம் ரூ.120 ஆக இருந்தது. ஆனால் ரூ.200 தந்தால் மட்டுமே வர முடியும் என்று 3 ஆட்டோ டிரைவர்கள் தங்கள் புக்கிங்கை ரத்து செய்து இருக்கிறார்கள். பயணிகளின் நெருக்கடியை கவனத்தில் கொண்டு தனியார் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கேட்கிறார்கள். வேறு வழியில்லாமல் பயணிகளும் கேட்ட கட்டணத்தை கொடுத்து தங்கள் பயணத்தை தொடருகிறார்கள்.

சென்ட்ரல் ரெயில் நிலையத்திலும் இதே பிரச்சினைதான் தினமும் நடக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண சம்பந்தப்பட்ட நிறுவனம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பயணிகள் தங்கள் புக்கிங்கை ரத்து செய்தால் ரூ.30 பிடித்தம் செய்வது வழக்கம். அதேபோல் டிரைவர்களும் ரத்து செய்தால் அவர்களிடமும் பணத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்கிறது.
Tags:    

Similar News