உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வீட்டின் கதவை உடைத்து ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை

Published On 2022-03-14 10:42 GMT   |   Update On 2022-03-14 10:42 GMT
ஏர்வாடி அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை:

வள்ளியூர் அருகே உள்ள ஏர்வாடியை அடுத்த மறுகால்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அப்பாத்துரை (வயது 60). விவசாயி.

இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஒரு துஷ்டி வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் பட்ட பகலில் அவரது வீட்டிற்கு வந்த கொள்ளையர்கள் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த 10 பவுன் தங்கநகை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளை யடித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.

நேற்று இரவு வீடு திரும்பிய அப்பாத்துரை, கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் செயின், ரொக்க பணம் ரூ.15 ஆயிரம் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

இதுகுறித்து அப்பாத்துரை ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கைரேகைகள் பதிவாகி உள்ளதா என்றும் ஆய்வு நடத்தப்பட்டது. இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News