உள்ளூர் செய்திகள்
காங்கயம் தி.மு.க. நகராட்சி துணைத்தலைவர் ராஜினாமா
காங்கயம் நகராட்சி துணைத்தலைவர் தேர்தலில் வென்ற தி.மு.க.வை சேர்ந்த இப்ராகிம் கலிலுல்லா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
காங்கயம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சி தலைவர் பதவி கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் 10-வது வார்டில் போட்டியிட்ட ஹேமலதா நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மறைமுக தேர்தலில் காங்கிரஸ் வேட் பாளருக்கு முன்மொழிய கூட வேட்பாளர்கள் இல்லை என்பதால் தி.மு.க.வை சேர்ந்த 1-வது வார்டில் வெற்றி பெற்ற சூர்யபிரகாஷ் என்பவர் நகராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற தி-.மு.க.வை சேர்ந்தவர்கள் பதவி விலக வேண்டும் என்று தி.மு.க. தலைமை அறிவித்த நிலையில், சூர்யபிரகாஷ் நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. இந்தநிலையில் நகராட்சி துணைத்தலைவர் பதவியை காங்கிரசுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து காங்கயம் நகராட்சி துணைத்தலைவர் தேர்தலில் வென்ற தி.மு.க.வை சேர்ந்த இப்ராகிம் கலிலுல்லா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும் ராஜினாமா கடிதத்தை காங்கேயம் நகராட்சி ஆணையாளரிடம் அளித்தார். அதில் எனது நகர்மன்ற துணை தலைவர் பதவியை மட்டும் ராஜினாமா செய்கிறேன். எனது முடிவானது யாருடைய தூண்டுதல் இன்றி நல்ல மனநிலையில் சுயமாக முடிவு எடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.