உள்ளூர் செய்திகள்
5-வது நாளாக ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக 5-வது நாளாக ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை மண்டலம் கடந்த 5 நாட்களுக்கு முன்பு உருவாகியது. இதன் காரணமாக ஆழ் கடலில் பலத்த காற்று வீசி வருகிறது. ராமேசுவரம்,மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி ஆகிய கடலோர பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்று வீசத் தொடங்கியுள்ளது,
இதனை அடுத்து ராமேசுவரம், மண்டபம்,பாம்பன் பகுதி மீனவர்கள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல கூடாது என ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மீன்பிடிக்கச் செல்லும் அனுமதிச்சீட்டு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
வானிலை மையம் எச்சரிக்கையாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு மூன்றாவது நாளாக ஏற்றப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் 2000த்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடந்த 5 நாட்களாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5 கோடி ரூபாய்க்குமேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.