உள்ளூர் செய்திகள்
உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மாசிமாத அமாவாசை சிறப்பு பூஜை
அருவியில் குளித்து மகிழவும் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.
உடுமலை:
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.
அருவியில் குளித்து மகிழவும் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.
அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம், மகாசிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றார்கள்.
அந்த வகையில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்திமலைக்கு வருகை தந்தனர்.
அதைத்தொடர்ந்து பஞ்சலிங்க அருவிக்கு சென்று அதில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்துவிட்டு அடிவாரப்பகுதிக்கு வந்தனர். பின்னர் வரிசையில் நின்று மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்தனர்.