உள்ளூர் செய்திகள்
கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில் மாவிளக்கு ஊர்வலம்
நேற்று காலை வாண வேடிக்கை, மேளதாளத்துடன், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த 15-ந்தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. கடந்த 21-ந் தேதி விநாயகர் பொங்கல், ஸ்ரீராகவேந்திரர் கோவிலில் இருந்து கம்பம் எடுத்து வருவல், முளைப்பாரி ஊர்வலம், தீர்த்தக்குட ஊர்வலங்கள் நடந்தன. இரவு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து கம்பம் நடப்பட்டது. கடந்த 22-ந் தேதி படைக்கலம் மற்றும் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
நேற்று காலை வாண வேடிக்கை, மேளதாளத்துடன், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இன்று மஞ்சள் நீராட்டு உற்சவமும், நாளை அன்னதான நிகழ்ச்சியும் நடக்கிறது. பொங்கல் விழாவையொட்டி தினமும் சிறப்பு அலங்காரம் நடக்கிறது.
கடந்த 21-ந்தேதி சமயபுரம் மாரியம்மன் அலங்காரம், 22-ந்தேதி ஆதிபராசக்தி அலங்காரம் நடந்தது. நேற்று கோட்டை மாரியம்மன் தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று பண்ணாரி அம்மன் அலங்காரம், 25ந் தேதி மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அம்மன் காட்சியளிக்கிறார். முன்னதாக பொங்கல் விழாவையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து அம்மனுக்கு பூவோடு எடுத்துவரும் ஊர்வலமும் விமரிசையாக நடந்தது.