உள்ளூர் செய்திகள்
பெரியபாளையம் அருகே கணவன்-மனைவியை பாட்டிலால் குத்திய சிறுவர்கள்
பெரியபாளையம் அருகே பொங்கல் விழாவில் நடனம் ஆடியதை கண்டித்ததால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் கணவன்-மனைவியை பாட்டிலால் குத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குமரப்பேட்டை ஊராட்சியை சேர்ந்த ராள்ளபாடி கிராமத்தில் வசித்து வருபவர் திலீபன் (வயது 25).
ராள்ளபாடியில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவின் போது பெரியபாளையம் ஊராட்சியை சேர்ந்த அம்பேத்கர் நகரில் வசித்து வரும் 2 சிறுவர்கள் நடனம் ஆடினார்கள். அந்த சிறுவர்களை நடனம் ஆடக்கூடாது என திலீபன் அறிவுரை கூறி கண்டித்து அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில், திலீபன் கடந்த 26-ந் தேதி இரவு அம்பேத்கர் நகரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு மனைவி சரண்யாவுடன் சென்றார். அப்போது திலீபன் மற்றும் அவரது மனைவி சரண்யாவிடம் சிறுவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உடைந்த பாட்டிலை எடுத்து இருவரையும் சரமாரியாக குத்தினார்கள்.
படுகாயம் அடைந்த கணவன்-மனைவி இருவரும் அலறி துடித்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்கள். திலீபனின் உறவினர்கள் இருவரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சிறுவர்களின் வீட்டிற்கு திலீபனின் உறவினர்கள் வேலு உள்ளிட்ட 3 பேர் சென்று நியாயம் கேட்டார்கள். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொண்டார்கள்.
இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் தனித்தனியாக புகார் அளித்தார்கள். போலீசார் இரு தரப்பைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.