search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் பண்டிகை"

    • பெண்களும் கலந்து கொள்ளும் ஜல்லிக்கட்டு போட்டியை வெகு விமர்சையாக நடத்த சுற்றுலா நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகளும் திட்டமிட்டிருந்தன.
    • தொடக்கத்தில் மகளிர் பங்கேற்கும் ஜல்லிக்கட்டுப் போட்டி சாத்தியமில்லை என்று எதிர்த்தவர்களே, தற்போது ஆதரவு தரத் தொடங்கியுள்ளனர்.

    தைத்திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடததப்பட்டு வருகிறது. இதுவரை ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும். காளைகளை அடக்கி வெற்றி பெற்று காளையர்கள் பரிசுகளை குவித்து வந்தனர். இந்நிலையில் பெண்களும் கலந்து கொள்ளும் ஜல்லிக்கட்டு போட்டியை வெகு விமர்சையாக நடத்த சுற்றுலா நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகளும் திட்டமிட்டிருந்தன.

    இந்நிலையில் சுற்றுலா நிறுவன உரிமையாளரும், ஜல்லிக்கட்டு ஆர்வலருமான வி. கே. டி. பாலன் கூறியதாவது:

    அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின்போது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முடிவடைந்த பின்பு, அலங்காநல்லூர் அருகேயுள்ள ஜல்லிக்கட்டு அரங்கில் மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பெறும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். தொடக்கத்தில் மகளிர் பங்கேற்கும் ஜல்லிக்கட்டுப் போட்டி சாத்தியமில்லை என்று எதிர்த்தவர்களே, தற்போது ஆதரவு தரத் தொடங்கியுள்ளனர்.

    மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க பெண் போலீஸார், கபடி வீராங்கனைகள், கல்லூரி மாணவிகள் ஆர்வமாக முன் வந்துள்ளனர். அவர்களுக்கு 3 மாத காலம் பயிற்சி அளிக்க உள்ளோம்.

    முதல் மகளிர் ஜல்லிக்கட்டு என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் பெண்களுக்கு பாதுகாப்புக் கவச உடைகள் வழங்க உள்ளோம். அதற்கான வடிவமைப்புப் பணிகள் நடக்கின்றன.

    மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டியிலும் ஆண்களுக்கு வழங்குவது போல் கார், பைக் மற்றும் விலை உயர்ந்த பரிசுகளை வழங்க உள்ளோம். உயிருக்கு ஆபத்து, காயம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்க ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 13-ந்தேதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
    • திருப்பூர் ரெயில் நிலையத்தில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர்:

    பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து பனியன் நிறுவன தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்பியதால் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகம் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வேலை செய்து வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

    இதன் பின்னர் குறைந்தது 7 முதல் 10 நாட்கள் வரை விடுமுறை எடுத்து விட்டு திருப்பூருக்கு திரும்புவது வழக்கம்.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை கொண்டாட தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 13-ந்தேதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

    இதனால் திருப்பூரில் உள்ள பெரும்பாலான பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டன. இந்நிலையில் ஒரு வார விடுமுறைக்கு பின்னர் இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் திறந்து செயல்பட தொடங்கின. இதனால் பனியன் நிறுவன தொழிலாளர்கள் திருப்பூருக்கு காலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். இதன் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அரசு பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • பெற்றோர்களும், உறவினர்களுடன் ஆழமாக பேசி மகிழ்ந்ததில் குழந்தைகள் கண்காணிக்க தவறிவிட்டனர்.
    • போலீஸ் நிலையம் எண் அடங்கிய ஸ்டிக்கர் இடம் பெற்றதால் காணாமல் போன குழந்தைகளை எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது.

    சென்னை:

    காணும் பொங்கலை தினத்தில் சென்னை வாசிகள் நேற்று உற்சாகமாக கொண்டாடினார்கள். கடற்கரை, பூங்காக்களை ஆக்கிரமித்து கொண்டு குடும்பத்துடன் குதூகலமாக ஆடிப்பாடினார்கள். அதில் முக்கியமான பொழுது போக்கு மையமாக மெரினா கடற்கரை இடம் பெற்றது.

    மெரினா கடற்கரையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் கூடி மகிழ்ந்தனர். நண்பர்கள், உறவினர்கள் குடும்பமாக கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்தும், ஓடி விளையாடியும் நேரத்தை செலவிட்டனர். அங்கு அசம்பாவித சம்பவம் எதுவும் நடக்காமல் இருக்க போலீசார் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலம் கண்காணித்தனர். கடலில் குளிக்க தடை விதித்து இருந்த நிலையில் மீறி வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.

    உழைப்பாளர் சிலை முதல் களங்கரை விளக்கம் வரை உள்ள மணல் பகுதி யில் குடும்பமாக அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவு, நொறுக்கு தீணிகளை ஒருவருக்கொருவர் பரிமாறி சாப்பிட்டனர். அப்போது தங்கள் குழந்தைகளை மணலில் விளையாடவிட்டு பார்த்து ரசித்தனர். தங்கள் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் திடீரென திசைமாறி சென்றனர்.

    பெற்றோர்களும், உறவினர்களுடன் ஆழமாக பேசி மகிழ்ந்ததில் குழந்தைகள் கண்காணிக்க தவறிவிட்டனர். இதனால் பலரது குழந்தைகள் காணாமல் போனது.

    இரவிலும் பகலை போல வெளிச்சத்தை பரப்பும் உயர் மட்ட மின்விளக்குகள் அங்கு இருந்த போதிலும் குழந்தைகள், பெற்றோர் தெரியாமல் தடுமாறி சென்றன. அருகருகே குழு குழுவாக அமர்ந்து இருந்ததால் குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோரை கண்டு பிடிப்பதில் குழப்பம் ஏற்பட்டு அலைந்து திரிந்தனர். சில குழந்தைகள் அழத்தொடங்கின.

    இதற்கிடையில் அடுத்த சில நிமிடங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காணாமல் பதறி போனார்கள். அங்குமிங்கும் அலைந்து திரிந்தார்கள்.

    காணும் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடிய குடும்பத்தினர், குழந்தைகள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தனர். கடற்கரை பகுதியில் ஓடி திரிந்தனர்.

    பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அழுது கொண்டே தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் கொஞ்ச நேரத்தில் குழந்தைகளை உங்களிடத்தில் ஒப்டைக்கிறோம். தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் படுத்தினார்கள். 'மைக்' மூலம் போலீசாரை உஷார்படுத்தி தனியாக சுற்றித் திரியும் குழந்தைகளை கண்காணித்தனர்.

    மெரினா கடற்கரை பகுதி முழுவதும் பெண் மற்றும் ஆண் போலீசார் சல்லடை போட்டு தேடினார்கள்.

    போலீசார் எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிறு குழந்தைகளின் கழுத்தில் அடையாள அட்டை ஒன்று மாட்டப்பட்டு இருந்தது. அதில் குழந்தைகளின் பெயர், பெற்றோரின் செல்போன் எண், போலீஸ் நிலையம் எண் அடங்கிய ஸ்டிக்கர் இடம் பெற்றதால் காணாமல் போன குழந்தைகளை எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது.

    மெரினா கடற்கரை கூட்டத்தில் 25 குழந்தைகளும், எலியட்ஸ் கடற்கரையில் 2 குழந்தைகளும், மொத்தம் 27 குழந்தைகள் காணாமல் போய் உடனடியாக மீட்டு பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    குழந்தைகளை காணாமல் பதறிய பெற்றோர்கள் கிடைத்தவுடன் கண்ணீர்விட்டனர். போலீசாருக்கு நன்றியை தெரிவித்து கடற்கரையில் இருந்து கடந்து சென்றனர்.

    • ஜல்லிக்கட்டு போல பல்வேறு சுற்றுக்களாக இந்த போட்டிகள் நடந்தது.
    • நூற்றுக்கணக்கான தேங்காய்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தமிழர் திருநாளான பொங்கல் வந்துவிட்டாலே கிராமங்கள் களை கட்ட தொடங்கிவிடும். 3 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் விழாவில் பல்வேறு நூதன போட்டிகள் நடத்தி கிராம மக்கள் அசத்துவது வழக்கம்.

    மாடுகளை பிடிக்கும் வீர விளயாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது போல தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது வித்தியாசமான போட்டிகளை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பொங்கல் விழாவில் நடைபெற்ற பல்வேறு நூதன போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர், வேம்பங்குடி, மேற்பனைக்காடு, திருவாப்பாடி, மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பைங்கால், சாணாகரை, பேராவூரணி, தென்னங்குடி, வலப்பிரமன்காடு, செருவாவிடுதி, களத்தூர் மற்றும் பல கிராமங்களில் தேங்காய்களால் மோதிக் கொள்ளும் வித்தியாசமான போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    எதிர் எதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வார்கள். இந்த மோதலில் உடையும் தேங்காயை, மோதி உடைத்தவர் எடுத்துக் கொள்வார். இந்த மோதலுக்கான ஒரு போர் தேங்காய் ரூ.300 முதல் ரூ. 500 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

    ஒரே தேங்காயை கொண்டு பல தேங்காய்களை உடைத்து கொண்டு செல்பவர்களும் உள்ளனர். ஜல்லிக்கட்டு போல பல்வேறு சுற்றுக்களாக இந்த போட்டிகள் நடந்தது.

    புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் விளையாட்டு திடலில் போர் தேங்காய் உடைக்கும் விளையாட்டு போட்டி நடந்தது. பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் பைகளில் தேங்காய்களுடன் வந்து முன்பதிவு செய்து போட்டியில் கலந்து கொண்டனர்.

    தேங்காய்களை நேருக்கு நேர் மோத வைத்தனர். பல தேங்காய்களை ஒரு சில தேங்காய்கள் வைத்து மோதி உடைத்தனர். சிலர் மோதி உடைத்த தேங்காய்களை சாக்கு நிறைய அள்ளிச் சென்றனர். போர் தேங்காய் பரிசுப் போட்டியில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மாவடுகுறிச்சி முத்துக்குமார் அதிக தேங்காய்களை உடைத்து முதல் பரிசு ரூ.4004 மற்றும் சுழற்கோப்பை பெற்றார்.

    இதேபோல செரியலூரில் நேற்று நடந்த போட்டியில் நூற்றுக்கணக்கான தேங்காய்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இது பற்றி பொதுமக்கள் கூறுகையில், இது எங்களின் சந்தோசத்துக்காக நடத்தப்படும் போட்டி. இந்த போட்டியில் பங்கேற்க போர்காய் தேங்காய்களுக்காக ஒவ்வொரு கிராமமாக அலைந்து தேங்காய்கள் வாங்க வேண்டும். 2 மாதங்களுக்கு முன்பே தேங்காய் வாங்கிவிட்டோம் என்றனர்.


    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகை மலை ஊராட்சி, கள்ளை தொட்டியப்பட்டியில் கம்பளத்து நாயக்கர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் வருடாந்தோறும் தை மாதம் 1-ந்தேதி கள்ளையில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பாக ஊர் கவுண்டர் முன்னிலையில் பரிவட்டம் வாங்கி எட்டுப்பட்டி பொதுமக்கள் முன்பாக மாரியம்மன் கோவிலை வலம் வந்து சுற்றி மாடுகளை விரட்டி மறித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து அவர்களின் பாரம்பரிய கலையான தேவராட்டம், புல்லாங்குழல் வாசித்தல், கோமாளி ஆட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது,

    விழாவில் கல்லை ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா, மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாடு மறித்தல் நிகழ்ச்சியில் 70 களை மாடுகள், நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களும் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பத்திற்கு மேற்பட்ட கிராம மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கண்டுகளித்தனர்.

    • ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் வரத்தொடங்கியுள்ளனர்.
    • மெயின் அருவியில் நீர் வரத்து சீராக இருப்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் தற்போது மெயின் அருவியில் குவிந்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரதான சுற்றுலா தளமானது குற்றாலம்.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    மார்கழி மாதம் ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் குற்றால அருவிகளில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில் சபரிமலையில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு குற்றாலத்திற்கு ஐயப்ப பக்தர்கள் வருகை முற்றிலும் குறைந்து காணப்பட்டது.

    தற்போது பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

    தொடர் விடுமுறையை கழிக்க வெளியூர் மட்டும் தென்காசி சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் வரத்தொடங்கியுள்ளனர்.

    மெயின் அருவியில் நீர் வரத்து சீராக இருப்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் தற்போது மெயின் அருவியில் குவிந்துள்ளனர்.

    தற்போது குற்றால அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வேன், கார், பஸ், மோட்டார் சைக்கிள் என பல்வேறு வாகனங்களில் குடும்பமாக வந்து உற்சாக குவிந்து வருகின்றனர். மேலும் குற்றாலம் பேரூராட்சி பூங்கா, குண்டார் அணை, அடவி நயினார் அணை பகுதி, பண்பொழி குமாரசாமி கோவில், தோரணமலை முருகன் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

    • மாமல்லபுரத்தில் இன்று காலையிலேயே சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தது.
    • காணும் பொங்கலையொட்டி சென்னை பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று காணும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காணும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் லட்சக்கணக்கில் மக்கள் குவிந்தனர்.

    சென்னை மெரினா கடற்கரைக்கு காணும் பொங்கலையொட்டி இன்று காலை 11 மணியில் இருந்தே பொதுமக்கள் வரத் தொடங்கினார்கள். நேரம் செல்லச்செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு வந்திருந்தனர். பிற்பகலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர்.


    அவர்கள் கடற்கரை மணலில் ஒன்றாக அமர்ந்து பொழுதை போக்கினார்கள். குழந்தைகள் கடற்கரை மணலில் உற்சாகமாக விளையாடினார்கள். தொடர்ந்து பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதன் காரணமாக மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.

    மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி பிக்பாக்கெட் மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும், பெண்களிடம் அத்துமீறுபவர்களை கட்டுப்படுத்தவும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜன் மேற்பார்வையில் மெரினா கடற்கரை முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் ஏற்படுத்தப்பட்டு 13 கேமராக்களும் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்களில் நின்றபடி 3 போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணித்தனர்.


    மெரினாவில் இன்று கடலில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட நீச்சல் பயிற்சி பெற்ற போலீசார் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குதிரைப்படையினருடன், கடற்கரை மணல் பரப்பில் செல்லக்கூடிய 3 வாகனங்கள் மூலமாகவும் ரோந்து சென்றுபோலீசார் கண்காணித்தனர். மேலும் டிரோன் கேமராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரைக்கு வந்த மக்கள் அங்கிருந்து அருகில் உள்ள தீவுத்திடலுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியையும் கண்டுகளித்தனர். அங்கு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டனர். தனியார் அரங்குகளையும் சுற்றிப்பார்த்தனர். மேலும் பொழுதுபோக்கு விளையாட்டுகளிலும் விளையாடி மகிழ்ந்தனர். அங்குள்ள உணவகங்களில் தங்களுக்கு பிடித்த உணவு வகைகளையும் உண்டனர்.

    மாமல்லபுரத்தில் இன்று காலையிலேயே சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தது. உள்நாட்டு பயணிகள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் அங்குள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல், கடற்கரை கோவில், ஐந்து ரதம், புலிக்குகை பகுதிகளுக்கு குடும்பம், குடும்பமாக வந்து பார்வையிட்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    பயணிகளின் வசதிக்காக செங்கல்பட்டு, தாம்பரம், திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார் அனைத்து வாகனங்களையும் கிழக்கு கடற்கரை சாலை, பூஞ்சேரி பகுதியில் நிறுத்த ஏற்பாடு செய்தனர். மாமல்லபுரம் நகருக்குள் மினி பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் 3 கி.மீ தூரம் நடந்து சென்றே புராதன சின்னங்களை பார்க்க வேண்டியது இருப்பதால், அனுமதி பெற்ற உள்ளூர் ஆட்டோக்கள் சிலவற்றை நகருக்குள் இயக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். மாமல்லபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடுவோர், போதை ஆசாமிகளை கண்காணிக்க சாதாரண உடையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள், முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, வடநெம்மேலி முதலை பண்ணை, திருவிடந்தை கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கடந்த 2 நாட்களில் 37 ஆயிரம் பேர் வருகை தந்து விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்துள்ளனர்.

    இந்த நிலையில் காணும் பொங்கலையொட்டி இன்று காலையில் இருந்தே வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினார்கள். நேரம் செல்லச்செல்ல பொதுமக்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள விலங்குகள், பறவைகளை பார்வையிட்டனர். சிங்கம், புலி, வெள்ளைப்புலி, யானை, காண்டாமிருகம், மனித குரங்கு, ஒட்டகச்ச்சிவிங்கி, குதிரைகள், பறவைகள், பாம்புகள் ஆகியவற்றை பார்த்தனர். உயிரியல் பூங்காவில் புதிதாக வந்துள்ள உயிரினங்களான இருவாச்சி பறவை, மலேயன் ராட்சத அணில், ஜம்முவிலிருத்து கொண்டு வரப்பட்ட இமாலயன் கருப்பு கரடி, சிவப்பு மார்பக கிளி ஆகியவற்றையும் கண்டுகளித்தனர்.

    காணும் பொங்கலையொட்டி சென்னை பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் வந்தனர். அவர்கள் பழவேற்காடு கடற்கரையை சுற்றி பார்ப்பதற்காக உறவினர்கள், நண்பர்களுடன் கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர். பழவேற்காட்டில் டச்சு கல்லறை, நிழல் கடிகாரம், பழமை வாய்ந்த சிவன் கோயில், ஆதிநாராயண பெருமாள் கோவில், பழமை வாய்ந்த மசூதி, பழவேற்காடு ஏரி, பழவேற்காடு பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவைகளை கண்டு கழித்தனர். குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் சமைத்து கொண்டு வந்த உணவுகளை கடற்கரையில் அமர்ந்து உண்டனர். சிலர் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். பழவேற்காடு கடலில் குளிப்பதற்கும், படகு சவாரிக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சென்னையில் இருந்து அரசு பஸ்களில் மட்டும் 3 நாட்களில் 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
    • பல்வேறு நகரங்களில் இருந்து இன்று சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் புறப்பட்டு சென்றனர். பஸ், ரெயில்கள், கார்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு போனதால் 3 நாட்களாக சென்னை நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.

    சென்னையில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் வெளியூர் பயணம் மேற் கொண்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சென்னையில் இருந்து அரசு பஸ்களில் மட்டும் 3 நாட்களில் 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    பண்டிகை முடிந்து இன்று மீண்டும் சென்னைக்கு திரும்ப பயணத்தை தொடங்கிவிட்டனர். கார், இருசக்கர வாகனங்களில் காலையில் புறப்பட்டு இரவுக்குள் சென்னை வந்து சேருகிறார்கள்.

    பகல் நேர ரெயில்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் பயணம் செய்து இரவுக்குள் வீடு வந்து சேர திட்டமிட்டு உள்ளனர். அரசு பஸ், ஆம்னி பஸ்கள் மற்றும் ரெயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மாலையில் புறப்பட்டு காலையில் வந்து சேரும் வகையில் பயணத்தை தொடங்குகின்றனர்.

    இதற்காக பல்வேறு நகரங்களில் இருந்து இன்று சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, தென்காசி, விருதுநகர், கோவில்பட்டி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சேலம், ஓசூர், பெங்களூர், கோவை, சேலம் மற்றும் வட மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டு உள்ளன.

    வழக்கமாக இயக்கக் கூடிய 2100 பஸ்கள் மற்றும் 2000 சிறப்பு பஸ்கள் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது.

    அதேபோல 1800 ஆம்னி பஸ்கள் என மொத்தம் 6 ஆயிரம் பஸ்கள் இன்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் அதிகாலையில் இருந்து சென்னைக்கு வரத் தொடங்கும். அரசு பஸ்களில் பயணம் செய்ய ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    அரசு பஸ்களில் ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் ஆம்னி பஸ்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன.


    நாளை (18-ந்தேதி) பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் திறக்கப்படுவதால் இன்று இரவுக்குள் சென்னைக்கு திரும்புகிறார்கள். இதனால் வந்தே பாரத், துரந்தோ, உள்ளிட்ட அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் இடங்கள் நிரம்பியதால் மக்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    கோவை, பெங்களூர், மற்றும் தென் மாவட்ட பகுதிகளில் இருந்து வரும் ரெயில்களிலும் இடம் இல்லாததால் மக்கள் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பஸ்கள், கார்கள் போன்றவற்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்தை ஒழுங்கு செய்கின்றனர்.

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையப் பகுதி, பெருங்களத்தூர், மதுரவாயல், கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    5 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு நாளை அனைத்து அரசு அலுவல் பணிகளும் தொடங்குவதால் விடுமுறையில் சென்றவர்கள் பயணம் செய்தனர். ஒரு சிலர் மேலும் 2 நாட்கள் விடுப்பு போட்டுவிட்டு அதாவது 18, 19 விடுப்பு எடுத்துக் கொண்டு தொடர் விடுமுறையிலும் இருக்கிறார்கள்.

    சொந்த ஊர் சென்ற மக்கள் இன்று பயணம் மேற்கொள்வதால் சுங்கச்சாவடிகளிலும் வாகனங்களை விரைவாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    • கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.
    • மலர் பூந்தட்டு ஊர்வலம் மாலை 6 மணிக்கு முனியாண்டி கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எஸ்.கோபாலபுரம் கிராமத்தில் புகழ்பெற்ற முனியாண்டி சாமி கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு மறுநாளான மாட்டு பொங்கல் அன்று இங்கு பொங்கல் விழா மற்றும் அசைவ அன்னதான விருந்து நடைபெறும். இந்தாண்டு கோபலாபுரம் முனியாண்டி சாமி கோவிலில் 61-வது பொங்கல் விழா மற்றும் அசைவ அன்னதான விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை, புதுச்சேரி மற்றும் மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் மதுரை முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் பலரும் இந்த திருவிழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்வது வழக்கம். நேற்று கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.

    இதனையொட்டி நேற்று காலை 250 பெண்கள் பால் குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து சாமிக்கு குடம்குடமாக அபிஷேகம் செய்தனர். பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 100 ஆட்டு கிடாய்கள், 150 கோழிகளை கொண்டு கமகம அசைவ அன்னதானம் தயாரிக்கப்பட்டது. 60 மூட்டை அரிசியில் தயாரான அசைவ உணவு நேற்று காலை முதல் மதியம் வரை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    கோபாலபுரம், செங்கப்படை, புதுப்பட்டி, குன்னத்தூர், திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த அசைவ அன்னதானத்தில் கலந்து கொண்டு சாப்பிட்டனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை 4 மணியளவில் கோபாலபுரம் நாட்டாமை வீட்டிலிருந்து சாமிக்கு அபிஷேகம் செய்ய மலர்தட்டு ஊர்வலம் புறப்பட்டது.

    இதில் சுற்றுவட்டாரத்தினை சேர்ந்த பொதுமக்கள், முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்களின் குடும்பத்தினர் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். தாம்பூல தட்டில் தேங்காய், பூ, பழம் வைத்து நாட்டாண்மை வீட்டிலிருந்து ஊர்வலமாக கோவிலுக்கு கிளம்பினர். இந்த மலர் தட்டு ஊர்வலத்தின் முன்பு ஏராளமான சிறுவர்கள், பெரியவர்கள் சிலம்பம் சுற்றியபடி வந்தனர். பல பெண்கள் சாமியாடினர்.

    மலர் பூந்தட்டு ஊர்வலம் மாலை 6 மணிக்கு முனியாண்டி கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளரும், கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவில் நிர்வாகியுமான ராமமூர்த்தி கூறுகையில், தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தும் உரிமையாளர்கள் அனைவரும் மாட்டு பொங்கல் அன்று நடைபெறும் முனியாண்டி சாமி கோவில் திருவிழாவில் பங்கேற்போம்.

    நேர்த்திக்கடனாக ஆடுகளை செலுத்தி அசைவ அன்னதானம் நடைபெறும். எங்கள் ஓட்டலின் தினசரி முதல் வருவாயை உண்டியலில் சேகரித்து இந்த திருவிழாவிற்கு பயன்படுத்துவோம். எங்கள் தொழில் சிறப்பாக நடைபெறவும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் இந்த திருவிழாவில் கலந்து கொள்கிறோம் என்றார்.

    • பொதுமக்கள் அணைக்கட்டு பகுதிக்கு வந்து பொழுதுபோக்கி காலை முதல் மாலை வரை கொண்டாடுவது வழக்கம்.
    • காணும் பொங்கலை கொண்டாட காத்திருந்த பொது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    பவானி:

    பவானி அருகில் உள்ள காளிங்கராயன்பாளையத்தில் பவானி ஆற்றின் குறுக்கே காளிங்கராயன் அணைகட்டு கட்டப்பட்டு உள்ளது. இந்த அணை கட்டில் இருந்து பவானி ஆற்றின் இருந்து வெளியேறும் உபரிநீர் காலிங்கராயன் வாய்க்கால் வழியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாய நிலத்திற்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

    காலிங்கராயன் என்ற சிற்றரசரின் மூலம் கட்டப்பட்ட இந்த வாய்க்கால் பல ஆண்டுகளுக்கு முன்பு நீர் மேலாண்மையை மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளது. இந்த அணைக்கட்டு பகுதியில் தைத்திருநாள் முடிந்த பிறகு பொதுமக்களால் கொண்டாடப்படும் கரிநாள் மற்றும் காணும் பொங்கல் அன்று பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் அணைக்கட்டு பகுதிக்கு வந்து பொழுதுபோக்கி காலை முதல் மாலை வரை கொண்டாடுவது வழக்கம்.

    இந்த அணைக்கட்டு பகுதியில் அவிநாசி அத்திக்கடவு திட்ட பணிகள் துவக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்பு நலனுக்காக பொதுமக்கள் யாரும் அணைகட்டு பகுதிக்குள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    கடந்த 2 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டாவது அனுமதி கிடைக்கும் என காத்திருந்த பொது மக்களுக்கு 3-வது ஆண்டாக இந்த ஆண்டும் பாதுகாப்பு நலன் கருதி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சித்தோடு போலீசார் தெரிவித்துள்ளனர். காணும் பொங்கலை கொண்டாட காத்திருந்த பொது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    • மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.
    • திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 271 காளைகள், 81 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஆண்டுதோறும் தை 3-ம் நாள் பாரம்பரியமாக மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.

    இந்த ஆண்டு மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கிடையில் பரம்பரை முறைப்படி நடைபெறும் இந்த மஞ்சு விரட்டு நடைபெறும் திடலை சுத்தம் செய்து தொழு மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல், பார்வையாளர்கள் அமரும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை சிராவயலில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர், தொடர்ந்து வாணவேடிக்கை, மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவுக்கு கிராம மக்கள் வந்தனர். அங்கு கோவில் காளைகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.


    போட்டியில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மஞ்சுவிரட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 271 காளைகள், 81 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில், 8 மருத்துவ குழுவினர் மற்றும் காவல் துறையைச் சார்ந்தோர் 1,000 நபர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    சிராவயல் மஞ்சுவிரட்டையொட்டி திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, தென்கரை, அதிகரம், கிளாமடம், மருதங்குடி, கும்மங்குடி உள்ளிட்ட பகுதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளன.

    • ஊட்டி தாவரவியல் பூங்கா புல்வெளி மைதானத்தில் அமர்ந்து தங்களது குடும்பத்தினருடன் பேசி மகிழ்ந்தனர்.
    • அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சமவெளி பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சுற்றுலா தலங்களான ஊட்டி, வால்பாறை பகுதிகளுக்கு அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர்.

    கடந்த 3 தினங்களாக ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, லேம்ஸ்ராக் அணை, கேத்ரின் நீர்வீழ்ச்சி, முதுமலை புலிகள் காப்பகம், படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், பைன் பாரஸ்ட், தொட்ட பெட்டா மலைசிகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள், பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளை கண்டு ரசித்தனர்.

    தொடர்ந்து மலர்கள் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் ஊட்டி தாவரவியல் பூங்கா புல்வெளி மைதானத்தில் அமர்ந்து தங்களது குடும்பத்தினருடன் பேசி மகிழ்ந்தனர்.

    தங்கள் குழந்தைகளுடன் புல்வெளியில் ஆடி, பாடி, விளையாடியும் விடுமுறையை கொண்டாடினர்.


    ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வண்ண ரோஜா மலர்கள் பூத்து குலுங்கின. அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    ஊட்டி படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    • தை திருநாள் விழா ஒவ்வொரு கிராமத்திலும் வித்தியாசப்படுகிறது.
    • சென்னிமலை நகர பகுதியில் இந்த ஆண்டு பூப்பறிக்கும் விழா உற்சாகம் குறைந்து காணப்பட்டது.

    சென்னிமலை:

    தை மாதம் பிறந்து விட்டாலே தமிழக கிராமங்களில் திருவிழாவிற்கு பஞ்சம் இருக்காது. பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என தைத்திருநாள் விழாவிற்கு பல பெயர்கள் இருந்தாலும் தைப் பொங்கல் என கூறி கிராமத்தில் இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு புது துணி எடுப்பதில் ஆரம்பித்து வீடுகளை வெள்ளையடிப்பது, காப்பு கட்டுவது என விழா களைகட்ட தொடங்கி விடும்.

    நூற்றாண்டுகளாக தமிழர்களின் பண்பாட்டினையும் வாழ்வியல் நெறிமுறைகளையும் பாறை சாட்டும் விதமாக இது நடந்து வருகிறது. இந்த தை திருநாள் விழா ஒவ்வொரு கிராமத்திலும் வித்தியாசப்படுகிறது.

    குறிப்பாக சென்னிமலை பகுதியில் தை பொங்கல் விழா பெண்கள் திருவிழாவாக தான் பெரிதும் அறியப்படுகிறது. இங்கு தை 2-ம் நாள் நடக்கும் பூப்பறிக்கும் விழா நூற்றாண்டுகள் கடந்தும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இளம் பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டு மலைகளில் இருந்து ஆவாரம் பூ பறிக்கின்றனர். சென்னிமலை சுற்று வட்டாரத்தை பொறுத்த வரை தை 2-ம் நாள் தான் பொங்கல் விழா தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தை பொங்கலை முன்னிட்டு சென்னிமலை பகுதியில் நேற்று பூப்பறிக்கும் விழா கொண்டாடப்பட்டது.

    சென்னிமலை நகரில் உள்ள பொதுமக்கள் சென்னிமலையின் தென்புறம் உள்ள மணிமலை பகுதிக்கு சென்று பூப்பறித்து வருவார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் நேற்று 50-க்கும் குறைவான பெண்கள் தான் கலந்து கொண்டனர். சென்னிமலை நகர பகுதியில் இந்த ஆண்டு பூப்பறிக்கும் விழா உற்சாகம் குறைந்து காணப்பட்டது.

    ஆனால், கிராம பகுதிகளில் தொட்டம்பட்டி, தோப்புபாளையம், அய்யம்பாளையம், சில்லாங்காட்டுவலசு, வெப்பிலி, சொக்கநாதபாளையம், எல்லைகுமாரபாளையம் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் முதலமடை பகுதியிலும், ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் நொய்யல் ஆற்றங்கரை பகுதியிலும், முருங்கத்தொழுவு, குமாரபாளையம், பழையபாளையம், இளம் பெண்கள் அம்மன்கோயில் பகுதியிலும் தாங்கள் கொண்டு சென்ற கரும்பு மற்றும் திண்பண்ட ங்களை உண்டு மகிழ்ந்து அப்பகுதியில் பூத்துக்குழுங்கும் ஆவாரம் பூக்களை பறித்து வரும் போது இளம் பெண்கள் தைப்பொங்கலின் பெருமையை கூறும் வகையில் பாட்டு பாடி, கும்மி அடித்து மகிழ்ந்தனர்.

    பின்பு மாலை வீடு திரும்பி வாசலில் கோலமிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று காலை தாங்கள் பறித்து வந்த பூக்களை ஆறு, கிணறுகளில் போடுவார்கள். பல நூற்றாண்டு பழமையான விழா ஆனாலும் இன்று கிராம பகுதியில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் படித்து பல்வேறு துறைகளில் வேறு ஊர்களில் பணியாற்றினாலும் இந்த பெண்கள் இன்றும் இந்த பூப்பறிக்கும் விழாவினை பழமை மாறாமல் சிறப்பாக கொண்டாடினர்.

    ஆனால் சென்னிமலை நகர பகுதியில் பூப்பறிக்கும் விழா இந்த ஆண்டு உற்சாகம் குறைந்து காணப்பட்டது.

    ×