search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "omni buses"

    • தொடர் விடுமுறை முடிந்து வெளியூர் சென்றுள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளனர்
    • அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த இரு தினங்களாக ஆம்னி பஸ்களை அதிகாரிகள் சோதனையிட்டதில் முறையான ஆவணம் இல்லாதது உள்பட பல்வேறு குற்றச்சாட்டின் பேரில் 120 பஸ்கள் பிடித்து வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த பஸ்களில் முறையான ஆவணங்கள் வைத்திருந்தும் சில பஸ்களை பிடித்து வைத்துள்ளதாகவும், இதனால் பஸ்களை விடுவிக்காவிட்டால் இன்று மாலை 6 மணி முதல் பஸ்களை இயக்க மாட்டோம் என்றும் ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    இதைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆம்னி பஸ் சங்க தலைவர்களுடன் போனில் பேச்சுவர்த்தை நடத்தினார். போக்குவரத்து கழக அதிகாரிகளை சந்தித்து பேசி போராட்டத்தை கைவிடும்படி அவர்களிடம் எடுத்துக் கூறினார். அதன் பேரில் போக்குவரத்து துறை அதிகாரி சண்முகசுந்தரத்தைச் சந்தித்து ஆம்னி பஸ் சங்கத்தினர் பேசினார்கள்.

    இதுகுறித்து அமைச்சர் சிவசங்கரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

    ஆம்னி பஸ் சங்கத்தினருடன் நான் தொலைபேசியில் பேசினேன். அவர்கள் சில கோரிக்கையை சொல்லி உள்ளனர்.

    குறிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்ட பஸ்களில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்கள். தவறு இழைக்கும் பஸ் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த கருத்து மாறுபாடும் இல்லை என்று தெரிவித்தனர். எனவே நான் அதிகாரிகளிடம் சொல்லி உள்ளேன். ஆகவே பிடித்து வைத்துள்ள பஸ்களை ஆய்வுசெய்து தவறு இல்லை என்றால் பஸ்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மற்ற பஸ்கள் நடவடிக்கைக்கு உட்படும். ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

    அதேபோல் வெளிமாநில பதிவு பஸ்களை ஓட்டுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இப்போது பண்டிகை விடுமுறை காலமாக இருப்பதால் மக்களை பாதிக்காத வகையில் மேலும் கூடுதல் பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    எப்படி இருந்தாலும் இந்த விஷயத்தில் ஆம்னி பஸ் சங்க நிர்வாகிகளுடன் அரசு அதிகாரிகள் பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள். எனவே பேச்சுவார்த்தையில் போராட்டம் வாபஸ் ஆகி விடும் என எதிர்பார்க்கிறேன்.

    கூடுதல் கட்டணம் பிரச்சினை வராமல் இருப்பதற்காக தீபாவளி பண்டிகைக்கு முன்பாக கடந்த ஆண்டை போலவே ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

    அதன்பிறகும் அவர்கள் ஏதும் தவறு செய்தால் அது குறித்து புகார் செய்வதற்கு தீபாவளிக்கு முன்பாக தொலைபேசி எண் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே ஆம்னி பஸ்களில் மற்றொரு சங்கமான தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் மாறன் கூறுகையில், "ஆம்னி பஸ்கள் அனைத்தும் இயங்கும். பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்" என்று கூறினார்.

    இந்நிலையில், தமிழ்நாடு ஆம்னி பஸ்கள் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து ஆம்னி பஸ் நிர்வாகிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. சென்னை கே.கே.நகரில் உள்ள அலுவலகத்தில் போக்குவரத்து துறை இணை ஆணையர் தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வைத்த கோரிக்கைகளை அதிகாரிகள் கவனமுடன் பரிசீலித்தனர். அரசு தரப்பிலும் பல்வேறு நிபந்தனைகள் வைக்கப்பட்டன. இவைகள் அனைத்தும் பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து ஆம்னி பஸ் நிர்வாகிகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

    • தொடர் விடுமுறை முடிந்து வெளியூர் சென்றுள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளனர்
    • இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பஸ்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    சென்னை:

    பண்டிகை, விடுமுறை மற்றும் முக்கிய சிறப்பு நாட்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்தாலும் கடைசி கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புறப்படுவதால் போக்குவரத்து சேவையை அதிகமாக்குவது அவசியமாக மாறிவருகிறது.

    இந்நிலையில், தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் நடத்தும் ஆம்னி பஸ்களை நாடி வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குறிப்பாக, தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதுவதை காணமுடிகிறது.

    இதையடுத்து ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்ந்து விடுகிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் இரட்டிப்பு கட்டணம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    தற்போது ஆயுதபூஜை விடுமுறை தொடர்ந்து 4 நாட்கள் வந்ததால் ஆம்னி பஸ்களின் கட்டணம் அதிகளவு உயர்த்தப்பட்டு விட்டதாக புகார்கள் எழுந்தன. சில ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 150 சதவீதத்துக்கும் அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

    இதற்கிடையே ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது. இதற்காக அதிரடி சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

    அப்போது அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறி 120-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன. அந்த பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுவதும் தடை செய்யப்பட்டது.

    மேலும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக அந்த ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. சுமார் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. பஸ்களை சிறை பிடித்ததோடு அபராதமும் விதிக்கப்பட்டதால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    ஆம்னி பஸ் கட்டணத்தை ஒழுங்குபடுத்த கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டு இருப்பதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக தென் மாநில ஆம்னி பஸ்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயம் இல்லாத போதிலும் அரசுக்கும், பயணிகளுக்கும் பாதிக்காத வண்ணம் சங்கங்களே கட்டணம் நிர்ணயம் செய்து கடந்த 2022 செப்டம்பர் மாதம் போக்குவரத்து அமைச்சர் மற்றும் ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்டணம் ஒப்புதல் பெற்று அதே கட்டணத்தில் இன்று வரை இயக்கி கொண்டுள்ளோம்.

    கடந்த 10 நாட்களாக அண்ணாநகர் சரக இணை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலரும் சங்கங்களுடன் இணைந்து சங்கங்கள் நிர்ணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கண்காணித்து இன்று வரை அதிக கட்டணம் புகார் இல்லாமல் இயங்கி வந்தது.

    இந்நிலையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி மற்றும் 4 நாட்கள் தொடர் விடுமுறை முன்னிட்டு தவறு செய்யாமல் இயங்கிய 120 ஆம்னி பஸ்களை அதிக கட்டணம் என்ற பெயரில் ஆணையரின் தவறான வழிகாட்டுதலின்படி சிறை பிடித்தும், மீண்டும் சிறை பிடிப்பதை நிறுத்தக் கோரியும் இன்று (24-ந்தேதி) மாலை 6 மணி முதல் ஆம்னி பஸ்கள் இயங்காது.

    இன்று ஆம்னி பஸ்களில் 1 லட்சத்துக்கு மேலான பயணிகள் முன்பதிவு செய்துள்ளார்கள். அவர்களை போக்குவரத்து துறை சார்பாக வழியில் இறக்கி விடுவதை தவிர்க்கும் பொருட்டு, அனைத்து சங்கங்களும் இணைந்து வேறு வழியில்லாமல் கனத்த இயத்துடன் இதனை அறிவிக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஆயுதபூஜை தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து மட்டும் சுமார் 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அதுபோல மற்ற நகரங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று இருக்கிறார்கள். அவர்கள் இன்று மாலை முதல் திரும்புவதற்கு ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்திருந்தனர்.

    இன்று மட்டும் சுமார் 1 லட்சம் பயணிகள் ஆம்னி பஸ்களில் சொந்த ஊர்களில் இருந்து முன்பதிவு செய்திருக்கிறார்கள். ஆம்னி பஸ் உரிமையாளர்களின் ஸ்டிரைக் அறிவிப்பால் அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மாற்று ஏற்பாடுகள் கடைசி நிமிடத்தில் செய்யமுடியாத நிலையில் பெரும்பாலானோர் இன்று சொந்த ஊர்களில் இருந்து புறப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் ஆம்னி பஸ் ஸ்டிரைக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • தசரா திருவிழாவை காண பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
    • பஸ்கள் தேவை அதிகரித்துள்ள நிலையில் அக்டோபர் 21 முதல் 24-ந்தேதி வரை கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மைசூரு தசரா விழா உலக புகழ்பெற்றது. மைசூரு தசரா விழா கடந்த 15-ந்தேதி மைசூரு சாமுண்டி மலையில் உள்ள காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கோலாகலமாக தொடங்கியது. இது 414-வது தசரா விழா ஆகும்.

    தசரா விழா தொடங்கி உள்ளதால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரில் எங்கு பார்த்தாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கி உள்ளதால், மக்கள் கூட்டம் அதிமாக உள்ளது.

    தசரா திருவிழாவை காண பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் ஆயுத பூஜை, விஜய தசமி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.

    இதனால் பஸ்களில் கூட்டம் நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. எனவே பெங்களூருக்கு வெளியே 500 பேருந்துகளை இயக்குமாறு பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கும், கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகத்திற்கும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பஸ்கள் தேவை அதிகரித்துள்ள நிலையில் அக்டோபர் 21 முதல் 24-ந்தேதி வரை கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    இதற்கிடையே முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2 நாட்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது டிக்கெட் முன்பதிவு 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

    நேற்று முன்தினம் ஆன்லைனில் டிக்கெட் வாங்கிய பிறகு 46,000-க்கும் மேற்பட்ட நபர்கள் பேருந்துகளில் பயணம் செய்தனர். மேலும் நேற்று அந்த எண்ணிக்கை 56,000 ஆக உயர்ந்தது. இதனால் 2 நாட்களில் 1 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    விழா காலத்தை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து ஐதராபாத் செல்ல ரூ.3,000, மங்களூருவுக்கு ரூ.2,000, பெலகாவிக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000, ஹுப்பள்ளிக்கு ரூ.1,700 முதல் ரூ.1,900 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கின்றனர். விஜயபுராவுக்கு ஒரு நபருக்கு பயண கட்டணம் 2,500 ரூபாயை தாண்டியுள்ளது.

    • 4 பஸ்களுக்கு அபராதம் விதிப்பு
    • நீண்ட தூரம் செல்லும் தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வந்தது.

    புதுச்சேரி:

    ஆயுத பூஜை பண்டிகை யொட்டி இன்று 21-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை 4 தினங்கள் விடுமுறை நாட்களாக உள்ளது.

    இந்த விடுமுறையை பயன்படுத்தி பலரும் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில், பஸ், ஆம்னி பஸ் களில் செல்கின்றனர்.

    ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பயணிகள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரெயில் மற்றும் பஸ்களில் டிக்கெட் கிடைக்கவில்லை.

    இதனால் நீண்ட தூரம் செல்லும் தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வந்தது.

    அதையடுத்து தமிழக அரசு ஒவ்வொரு ஊருக்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற ஆணையை வெளியிட்டது. அதன் அடிப்படையில் புதுவையை அடுத்த தமிழக பகுதியான மொரட்டாண்டி டோல்கேட்டில் திண்டிவனம் சரக்கு போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் போக்குவரத்து ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமை யிலான போக்குவரத்து துறை அலுவலர்கள் சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து புதுவை நோக்கி வந்த தனியார் பஸ் மற்றும் தனியார் ஆம்னி பஸ்களை நிறுத்தி பரிசோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 4 ஆம்னி பஸ்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் விதிக்கப்பட்டது. 

    • ஆம்னி பஸ்களுக்கு டிக்கெட் வழங்கும் அலுவலகங்கள் மெயின் பஜாரிலேயே அமைந்துள்ளன.
    • ஆம்னி பஸ்கள் நின்று செல்ல நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிறுத்தத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    திருச்செந்தூர், உடன்குடி ஆகிய பகுதிகளில் இருந்து ஆறுமுகநேரி வழியாக சென்னை, கோவை, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு தினசரி ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன. அதன்படி மாலையில் தொடங்கி இரவு 9 மணி வரையில் 40-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் ஆறுமுகநேரி மெயின்பஜார் வழியாக செல்கின்றன.

    ஆம்னிபஸ்

    இவற்றிற்காக டிக்கெட் வழங்கும் தனியார் அலுவலகங்கள் மெயின் பஜாரிலேயே அமைந்துள்ளன. இதனால் பயணிகளை ஏற்றி செல்வதற்காக ஆம்னி பஸ்கள் மெயின் பஜாரில் வழி நெடுக அடுத்தடுத்து நிற்கின்ற நிலை உள்ளது. குறுகிய சாலை என்பதாலும் போக்குவரத்து மிகுந்த நேரம் என்பதாலும் அங்கு போக்கு வரத்து நெரிசல் அதிகரிக்கும் நிலைமைக்கு ஆம்னி பஸ்கள் காரணமாகி விடுகின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத நிலையே இருந்து வந்தது. இதனிடையே ஆறுமுகநேரி பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே நீண்ட காலமாக மற்றொரு தீரா பிரச்சனையாக இருந்து வந்த ஒரு ஏக்கர் பரப்பளவு குப்பை கிடங்கு ரூ. 1.40 கோடி செலவில் அகற்றப்பட்டு தற்போது புதிய நிலப்பரப்பாக காட்சி யளிக்கிறது. ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோரின் தீவிர ஆலோ சனைக்கு பிறகு பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே ஆம்னி பஸ்கள் நின்று செல்வதற்கான நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிறுத்தத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பேரூராட்சி மன்றத்தில் தீர்மா னமும் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில் ஆம்னி பஸ் நிறுத்தத்திற்கான இடத்தை நெல்லை மண்டல பேரூராட்சி களின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் நேரில் பார்வை யிட்டார். பஸ் நிறுத்தத்தின் மற்றொரு பகுதியில் ஆட்டுச் சந்தை அமைக்கப்பட இருப்பதையும் அவர் ஆய்வு செய்தார்.

    • கூடுதல் கட்டணம் வசூலித்தால் பயணிகளிடம் திருப்பிக் கொடுக்க நடவடிக்கை.
    • தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களுக்காக இதுவரை 91,000 பேர் பயணம்.

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது தொடங்கியுள்ளது.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளதாவது:

    பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டி, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் (வெள்ளிக்கிழமை) இயக்கப்படுகிறது. இன்று வழக்கமான பேருந்துகளுடன் 2,100 உடன், 1430 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

    இதுவரை 91,000 பேர் தமிழகம் முழுவதும் பயணம் செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெரிய அளவில் புகார்கள் இல்லை. எனினும், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். குறிப்பிட்ட சில ஆம்னி பேருந்துகள், இணையதளம் மூலமாக அதிக கட்டணம் வசூலிப்பது தெரிந்தால், டிக்கெட் கட்டணத்தை தாண்டி, மீதி கட்டணத்தை பயணியிடம் திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
    • ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்றாலும் முறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் பள்ளிகள் வருகிற 13-ந்தேதி திறக்கப்படுகின்றன.

    1 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு முதலில் வகுப்பு தொடங்குகிறது.

    அதனைத் தொடர்ந்து 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 20-ந்தேதியும், பிளஸ்-1 மாணவர்களுக்கு 27-ந்தேதியும் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படுகிறது.

    கோடை விடுமுறையில் வெளியூர் சென்று இருந்த பெற்றோர், குழந்தைகள் பள்ளிகள் திறப்பதால் சொந்த ஊர் திரும்பி வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வருகிற 13-ந்தேதி வரை முகூர்த்த நாட்கள் இருப்பதால் ஏராளமான திருமணங்கள் நடக்கின்றன.

    இதனால் வெளியூர் பயணம் அதிகரித்துள்ளது. அரசு பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆம்னி பஸ்களிலும் அனைத்து இடங்களும் நிரம்பி வருகின்றன. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, கோவை செல்லக்கூடிய ஆம்னி பஸ்களும், அங்கிருந்து சென்னைக்கு வரக்கூடிய பஸ்களிலும் தேவை அதிகரித்து வருவதை அறிந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டனர். அடுத்த வாரம் அனைத்து ஆம்னி பஸ்களிலும் டிக்கெட் விலை உச்சத்தை தொட்டு உள்ளது.

    இன்று (வியாழக்கிழமை) முதல் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை எல்லா ஆம்னி பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. தனியார் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் தேவை அதிகரித்து வருவதை தொடர்ந்து டிக்கெட் கட்டணத்தை இஷ்டத்துக்கு உயர்த்தி உள்ளனர்.

    மதுரையில் இருந்து சென்னை வருவதற்கே ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குளிர்சாதன படுக்கை கட்டணம் ரூ.1,600 முதல் ரூ.2000 வரை வசூலிக்கப்படுகிறது. குளிர்சாதன வசதி அல்லாத இருக்கைகளுக்கு ரூ.1000 முதல் ரூ.1,500 வரையிலும் குளிர்சாதன இருக்கை வசதிக்கு ரூ.1,500 கட்டணமும் பெறப்படுகிறது.

    தூத்துக்குடி-சென்னைக்கு ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.1,650 முதல் ரூ.2,350 வரையும் ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.1,300-கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குளிர் சாதன வசதி அல்லாத படுக்கைக்கு ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண இருக்கைக்கு ரூ.1000 வரை வசூலிக்கப்படுகிறது.

    12-ந்தேதி பயணத்திற்கு ஏ.சி. படுக்கை வசதி ரூ.2000 முதல் ரூ.3000 வரையும் ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.1,600, ரூ.1,700, ரூ.1,750 வசூலிக்கப்படுகிறது. ஏ.சி. அல்லாத படுக்கைக்கு ரூ.1,800 வரையும் இருக்கைக்கு ரூ.1,500-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    12-ந்தேதி திருநெல்வேலி-சென்னைக்கு ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.1,800 முதல் ரூ.2,050 வரையும் ஏ.சி. அல்லாத படுக்கை மற்றும் இருக்கைக்கு ரூ.1,300 முதல் ரூ.1,800 வரை வசூலிக்கிறார்கள்.

    பயணத்திற்கு இன்னும் 3 நாட்கள் இருக்கும் நிலையில் இக்கட்டணம் அந்தந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்றாலும் முறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

    பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை சாதகமாக பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறார்கள். #Pongal2019 #OmniBuses
    போரூர்:

    பொங்கல் பண்டிகை நாளை (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 12-ந்தேதி முதல் வருகிற 17-ந்தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தொடர் விடுமுறை கிடைத்தது.

    இதனால் சென்னை மற்றும் வெளியூர்களில் வசிப்பவர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள்.

    சென்னையில் இருந்து தென் மாவட்டத்துக்கு செல்ல 12 ஆயிரம் சிறப்பு பஸ்கள் கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம், தாம்பரம் ரெயில் நிலையம் ஆகிய 5 இடங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 11-ந்தேதி இரவு முதலே பொது மக்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

    இதன் காரணமாக பஸ் நிலையங்களில் தினந்தோறும் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோல் ரெயில் நிலையம், ஆம்னி பஸ் நிலையத்திலும் கடும் கூட்டம் காணப்படுகிறது.

    பயணிகளின் கூட்ட நெரிசலை சாதகமாக பயன்படுத்தி ஆம்னி பஸ்கள் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறார்கள்.

    சென்னையில் இருந்து மதுரை செல்லும் சாதாரண ஆம்னி பஸ்சில் ரூ. 1,100 முதல் ரூ. 1,500 வரை வசூலிக்கப்பட்டது. வழக்கமாக ரூ. 600 முதல் ரூ. 700 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல் படுக்கை வசதி உள்ள பஸ்களில் ரூ. 1,800 முதல் ரூ. 2,200 வரை வசூலித்தனர்.

    சென்னையில்இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி, திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லும் பஸ்களில் ரூ. 2200 முதல் ரூ. 2500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டண உயர்வு கடந்த 9-ந்தேதி முதலே வசூலிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை- பெங்களூர், சென்னை-கோவை, சென்னை-திருச்சி, சென்னை - தஞ்சாவூர், சென்னை-மயிலாடுதுறை, சென்னை-கரூர் இடையே இயக்கப்பட்ட பஸ்களிலும் ரூ. 1,500 முதல் ரூ. 1,800 வரை கட்டணமாக பெற்றனர்.


    ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் அதையும் மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதுதவிர விதிமுறையை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பஸ்களிடம் இருந்து ரூ. 30 லட்சத்துக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்களில் இதுவரை 6 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த 11-ந்தேதி முதல் நேற்று வரை 10 ஆயிரத்து 427 பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன.

    நாளை பொங்கல் பண்டிகை என்பதால் இன்று இரவும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆம்னி பஸ் கட்டணம் குறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘சில சிறிய தனியார் பஸ் உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்துள்ளனர். பெரிய பஸ் நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கவில்லை. வழக்கமான கட்டணத்தையே வசூலித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #Pongal2019 #OmniBuses
    அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் 16 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. #Omnibuses

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண் டாட செல்லும் பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ், ரெயில்கள் விடப்பட்டுள்ளன. ஆம்னி பஸ்களிலும் இடங்கள் நிரம்பி வழிகிறது. தமிழகத்தில் 1100 ஆம்னி பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன.

    பண்டிகை கால கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் பலமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தைவிட 3 மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு சில ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் ஆன்லைனில் வெளிப்படையாக கூடுதல் கட்டணம் நிர்ணயித்து பொதுமக்களிடம் வசூலித்து வருகின்றனர்.

    அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கோயம்பேடு ஆம்னி பஸ்நிலையம், ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி, கிழக்கு கடற்கரை சாலை சுங்கசாவடி, ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிலையம் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்கிறார்கள்.

    இன்று (வெள்ளிக் கிழமை) 3,4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் தீவிர சோதனை செய்கின்றனர். 4 நாட்களிலும் 4 குழுக்கள் வீதம் 16 குழுக்கள் நியமிக்கப்பட்டு கூடுதல் கட்டணம், பெர்மிட் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கின்றனர். இதுகுறித்து அமலாக்கப் பிரிவு இணை ஆணையர் முத்து கூறியதாவது:-

    ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டும். 4 பஸ் நிலையங்களிலும் 4 நாட்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும். பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த பஸ் சிறை பிடிக்கப்படும். ஆன்லைனில் அதிக கட்டணம் குறிப்பிடப்பட்டு இருந்தாலும் சம்பந்தப்பட்ட பஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாது.

    அதனால் பஸ்சில் பயணம் செய்யும் போது அதிக கட்டணம் வசூலித்தது குறித்து புகார் தெரிவித்தால் கூடுதல் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும். மேலும் பெர்மிட் இல்லாமலும் இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார். #Omnibuses

    தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்ச எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #ministermrvijayabaskar #omnibus #diwalifestival

    கரூர்:

    தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனின் குற்றசாட்டு குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் கரூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் நலன் கருதி 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை திருச்சி, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட முக்கிய மாநகராட்சி பகுதிகளில் காலதாமதம் இல்லாமல் பஸ்கள் கிடைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    குறிப்பாக போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவற்றை தவிர்க்கும் வகையில் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், தொழிற் சங்கத்தினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    பஸ் நிலையங்களில் இரு சக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்டிகை கால பயணத்தை மக்கள் சிரமமின்றி மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக செய்யப்பட்டுள்ளது.

    ஆம்னி பஸ்களில் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிப்பது குறித்த அந்த சங்கத்தினருக்கு தெரிவித்து உள்ளோம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தாண்டி கூடுதலாக கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பஸ்களில் இதுபோன்ற செயல்கள் நடக்க வாய்ப்பில்லை. கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து உரிய ஆதாரத்துடன் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministermrvijayabaskar #omnibus #diwalifestival 

    ஓணம் பண்டிகைக்காக நாகர்கோவில் வந்த பயணிகள் ஆம்னி பஸ்களில் உயர்த்தப்பட்ட இருமடங்கு கட்டண உயர்வை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இம்முறை நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்ல குறைந்த பட்ச டிக்கெட் கட்டணம் ரூ.2500 ஆக நிர்ணயிக்கப்பட்டது. #OmniBuses
    நாகர்கோவில்:

    தமிழக அரசு பஸ்களில் கட்டண உயர்வு அமலுக்கு வந்த பின்னர், ஆம்னி பஸ்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    கட்டண உயர்வுக்கு பின்னர் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்களில் ரூ.800-ம் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களில் ரூ.1100 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

    பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் இக்கட்டணத்தை உயர்த்தி வாங்குவதாக அடிக்கடி போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

    குறிப்பாக தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளின் போதே ஆம்னி பஸ்கள் இது போன்ற கட்டண உயர்வை பயணிகள் மீது திணிக்கும்.

    ஆனால் இம்முறை ஓணம் பண்டிகைக்காக நாகர்கோவில் வந்த பயணிகளும் இந்த கட்டண உயர்வை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இம்முறை நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்ல குறைந்த பட்ச டிக்கெட் கட்டணம் ரூ.2500 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    வழக்கமாக ஆம்னி பஸ்களில் பயணம் செய்வோர் முன்கூட்டியே ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்வார்கள். ஓணப்பண்டிகை முடிந்து நேற்று ஊருக்கு புறப்பட ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்த போது அங்கும் கூடுதல் கட்டணம் குறிப்பிடபட்டிருந்தது.

    இது வழக்கமாக ஆம்னி பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் நேற்று வடசேரியில் உள்ள ஆம்னி பஸ்நிலையத்தில் பயணிகளுக்கும், ஆம்னி பஸ் கண்டக்டர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதம் மூண்டது.


    ஆன்லைனில் குறிப்பிடப்பட்ட டிக்கெட் கட்டணத்தை காட்டிலும் பயண நேரத்தில் வழங்கப்பட்ட டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகமாக இருந்தது. குறிப்பாக ரூ.800-க்கான டிக்கெட் கட்டணம் ரூ.2000-க்கும், ரூ.1100-க்கான சென்னை செல்லும் டிக்கெட் கட்டணம் ரூ.2500 முதல் ரூ.2800 வரையிலும் அதிக விலைக்கு விற்கப்பட்டது.

    அரசு பஸ்களில் டிக்கெட் கிடைக்காமல் ஆம்னி பஸ்களை தேடிவந்தவர்கள் இக்கட்டண உயர்வை கண்டு அதிர்ந்தனர். அவர்கள் நேற்று தகராறில் ஈடுபட்டனர். இதனால் வடசேரி ஆம்னி பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி பாதிக்கப்பட்ட பயணிகள் கூறும்போது, அரசுதான் இக்கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இதுபோன்ற பண்டிகை நாட்களில் ஆம்னி பஸ்நிலையங்களில் முகாமிட்டு சோதனை மேற்கொள்ள வேண்டும்.

    கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் லைசென்சையும் ரத்து செய்ய வேண்டும். எச்சரிக்கை செய்கிறோம் என்று கூறுவதைவிட அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் மக்களுக்கு பலன் கிடைக்கும். அதற்கு அரசு அதிகாரிகள் முன்வரவேண்டும், ஆன்லைனில் கூடுதல் கட்டணம் பதிவிட்ட ஆம்னி பஸ்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு ஆன்லைனில் அவர்கள் பதிவிட்ட கட்டண விபரங்களே போதும், என்றனர். #OmniBuses
    ரெயில் பயணிகளை குறி வைத்து ஆம்னி பஸ்கள் எழும்பூரில் இருந்து இயக்குவது போல் அரசு விரைவு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
    சென்னை:

    அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு முதல் கட்டமாக 100 சொகுசு பஸ்கள் வழங்கப்படுகிறது. முதன் முதலாக ஏசி படுக்கை வசதியுடன் அரசு பஸ்கள் தற்போது இயக்கப்படுகிறது. சென்னை-திண்டுக்கல் வழித்தடத்தில் மட்டும் கழிப்பிட வசதியுடன் கூடிய அல்ட்ரா டீலக்ஸ் பஸ் விடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து மதுரை, தேனி, போடி, சேலம், கரூர், ஈரோடு ஆகிய நகரங்களுக்கு படுக்கை வசதி சொகுசு பஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இன்று முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கீழக்கரை ஆகிய பகுதிகளுக்கு ஏசி படுக்கை வசதி பஸ் இயக்கப்படுகிறது. மேலும் சென்னை-பெங்களூர் இடையே படுக்கை வசதி பஸ் இன்று விடப்பட்டது. ஏற்கனவே விடப்பட்ட சொகுசு பஸ்களில் போடி, கரூர் பஸ்களில் கூட்டம் குறைவாக காணப்படுகின்றது. மற்ற வழித்தடங்களில் எல்லா நாட்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதனால் போடி, கரூருக்கு இன்று முதல் எழும்பூரில் இருந்து அரசு விரைவு சொகுசு பஸ் இயக்கப்படுகின்றன. எழும்பூரில் இருந்து இரவு 7 மணிக்கு போடிக்கும், 8 மணிக்கு கரூருக்கும் ஏசி படுக்கை வசதி சொகுசு பஸ் புறப்பட்டு செல்கின்றன.

    எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரெயில்கள் புறப்பட்டு செல்வதால் ரெயிலில் இடம் கிடைக்காதவர்கள், தவற விட்டவர்கள் ஆம்னி பஸ்களில் பயணம் செய்கிறார்கள். எழும்பூரில் ரெயில் நிலையம் பகுதியில் ஆம்னி பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி செல்கிறது. இரவு 7 மணி முதல் 11 மணி வரை ஆம்னி பஸ்கள் சாலையை ஆக்கிரமித்து கொள்வதால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

    இந்த நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகமும் எழும்பூரை மையமாக வைத்து பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, கிழக்கரை உள்ளிட்ட அனைத்து தென் மாவட்ட பகுதிகளுக்கும் எழும்பூரில் இருந்து விரைவில் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.

    ரெயில் பயணிகளை குறி வைத்து ஆம்னி பஸ்கள் எழும்பூரில் இருந்து இயக்குவது போல் அரசு விரைவு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி கூறுகையில், ‘‘கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்ட பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படும். ஏசி படுக்கை வசதி பஸ்களை மட்டும் எழும்பூரில் இருந்து இயக்குவதற்கு முடிவு செய்துள்ளோம். தலைமை செயலகம், எழிலகம், உள்ளிட்ட அரசு பணிகள் தொடர்பாக வெளியூரில் இருந்து வரகூடியவர்கள் எழும்பூரில் இருந்து தான் பயணத்தை தொடருகிறார்கள்.

    ரெயிலில் இடம் கிடைக்காத பயணிகள் பஸ்கள் மூலம் சொந்த ஊர் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அவர்கள் கோயம்பேடு சென்று அங்கிருந்து பயணத்தை தொடர்வதை காட்டிலும் எழும்பூரில் இருந்து அரசு பஸ்களில் பயணத்தை தொடர இது உதவியாக இருக்கும்’’ என்றார்.
    ×