உள்ளூர் செய்திகள்
பஞ்சு விலை மேலும் அதிகரிப்பு - ஜவுளித்துறையினர் கலக்கம்
கடந்த 15 மாதங்களில் கிலோவுக்கு 100 ரூபாய் ஒசைரி நூல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:
தமிழக நூற்பாலைகள் குஜராத், தெலுங்கானா உள்பட வெளிமாநிலங்களில் பஞ்சு கொள்முதல் செய்து அனைத்து நூல் ரகங்களையும் தயாரிக்கின்றன. முன் எப்போதும் இல்லாத வகையில் நடப்பு சீசனில் பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது.
கடந்த 15 மாதங்களில் கிலோவுக்கு 100 ரூபாய் ஒசைரி நூல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆடை தயாரிப்பு செலவு அதிகரிப்பு, வர்த்தகரிடமிருந்து புதிய ஆர்டர்களை பெறமுடியாமை, நடைமுறை மூலதன தேவை அதிகரிப்பு என திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.
யூக வணிகமே பஞ்சு விலை உயர்வுக்கு காரணம் என ஜவுளித்துறையினர் குற்றம்சாட்டி வருகின்றனர். நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். இறக்குமதி பஞ்சுக்கு வரி விலக்கு அளிக்கவேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பொங்கலுக்கு முன்புவரை கேண்டி (355.62 கிலோ) ரூ.76 ஆயிரமாக இருந்த பஞ்சு விலை தற்போது ரூ.81 ஆயிரத்தை தொட்டுள்ளது. இது ஒட்டுமொத்த ஜவுளித்துறையினரையும் கதி கலங்க செய்துள்ளது.
பஞ்சு விலை அதிகரிப்பால் நூல் விலை குறைய வாய்ப்பில்லை. மாறாக வரும் பிப்ரவரி 1-ந்தேதி நூல் விலை மேலும் உயர்ந்து விடுமோ? என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.