பணம் செலுத்தும் எந்திரம் தொடர் பழுது- ஏ.டி.எம். எந்திரத்தில் நூதன முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்திய வாடிக்கையாளர்
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தபால் நிலையம் எதிரே தேசியமய மாக்கப்பட்ட வங்கி ஒன்று உள்ளது. மாதாந்திர ஓய்வு தொகை பெறுபவர்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் என ஏராளமானோர் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்.
இந்த வங்கியின் முகப்பில் 24 மணி நேரமும் செயல்படும் ஏ.டி.எம்., பாஸ்புக் அச்சிடும் எந்திரம் மற்றும் பணம் செலுத்தும் எந்திரம் ஆகியவை உள்ளது. இதில் பணம் செலுத்தும் எந்திரம் பெரும்பாலான நேரங்களில் செயல்படாமலேயே இருக்கிறது. அவ்வாறு செயல்பட்டாலும் திடீரென சர்வர் கோளாறு காரணமாக பாதியில் முடங்கி விடுகிறது.
மேலும் பணம் செலுத்தும் முன் கேட்கும் விவரங்கள் அனைத்தையும் பதிவிட்ட பின்னரே பணம் செலுத்த இயலாது என்ற அறிவிப்பை இந்த எந்திரம் வெளியிடுகிறது. இது குறித்த எந்த அறிவிப்பும் வங்கி சார்பில் ஒட்டப்படுவது இல்லை. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த வங்கி சேவை குறைபாட்டில் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்களில் ஒருவர், அந்த ஏ.டி.எம். எந்திரம் மீது ஒரு பேப்பரில், ‘பணம் செலுத்த வேண்டும் என்றால் அருகில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாவூர்சத்திரம் வங்கிக்கு சென்று பணம் செலுத்தவும். நேற்று போல் இன்றும் தொடர் கதையாக இருக்கும் இயங்காத இந்த வங்கியின் ஆலங்குளம் கிளை, வாழ்க வளமுடன்’ என எழுதி வைத்து சென்றுள்ளார்.
இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.