உள்ளூர் செய்திகள்
இருமல்- சளிக்கு மருந்துகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் டாக்டர்கள் அறிவுறுத்தல்
வைரஸ் காரணமாக மூக்கு,தொண்டைப்பகுதியில் ஏற்படும் சளி மருந்துகள் ஏதுமின்றி தானாகவே சரியாகி விடும்.
உடுமலை:
உடுமலை நகரில் காய்ச்சலால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வழக்கத்திற்கு மாறாக காய்ச்சல் நோயாளிகள் காணப்படுகின்றனர்.'
பரிசோதனையில் கொரோனா மட்டுமின்றி வைரஸ் மற்றும் பாக்டீரியா காரணமாக பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதும் கண்டறியப்படுகிறது.
இருப்பினும் சிலர் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மருந்துக்கடைகளுக்குச்சென்று தாமாக மருந்து வாங்கி உட்கொள்கின்றனர்.
ஓரிரு தினங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வு எடுப்பதில்லை. பயம் மற்றும் அறியாமையால் அதிகப்படியான ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொள்வதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-
வைரஸ் காரணமாக மூக்கு,தொண்டைப்பகுதியில் ஏற்படும் சளி மருந்துகள் ஏதுமின்றி தானாகவே சரியாகி விடும். மார்புச்சளி,ஒவ்வாமைச் சளி ஆகியவற்றுக்கு சிகிச்சை அவசியம்.சிகிச்சை தேவைப்படும் நிலையில், டாக்டரின் பரிந்துரையுடன் முதல் கட்டமாக வீரியம் குறைந்த குறைவான எண்ணிக்கையிலான மாத்திரைகளைச் சாப்பிட்டால், சரியாகி விடும்.
நோய்க்கான காரணத்தை டாக்டரிடம் முழுமையாகக்கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். சிகிச்சைக்கு டாக்டர் பரிந்துரைக்கும் மாத்திரைகள் குறித்த விவரத்தை பின்பற்றுதல் வேண்டும். அதிகப்படியான மருந்துகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.