உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

Published On 2022-01-22 07:24 GMT   |   Update On 2022-01-22 07:24 GMT
நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் நிலக்கடலை சாகுபடிக்கு நூற்றுக்கணக்கான ஏக்கரில் விதைப்பு முடிந்துள்ளது.
உடுமலை:

உடுமலை சுற்றுப்பகுதியில் கிணற்றுப்பாசனத்துக்கு பல ஆயிரம் ஏக்கரில் நீண்ட கால பயிராக தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதே போல் காய்கறி சாகுபடியும் இப்பகுதியில் பிரதானமாக உள்ளது. வழக்கமாக கிணறு மற்றும் போர்வெல்களில் நீர் மட்டம் குறையும் போது காய்கறி சாகுபடி பரப்பு பாதியாக சரியும். 

இந்நிலையில் உடுமலை பகுதியில் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து பெரும்பாலான குளம், குட்டைகள் நிரம்பியுள்ளன. நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. இதனால் வழக்கத்தை விட நடப்பு சீசனில் காய்கறி சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. 

எனவே நீண்ட இடைவெளிக்குப்பிறகு நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளதால் நிலக்கடலை சாகுபடிக்கு நூற்றுக்கணக்கான ஏக்கரில் விதைப்பு முடிந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

உலர் தீவன தேவைக்காக முன்பு மானாவாரியாகவும் இறவை பாசனத்துக்கும், நிலக்கடலை சாகுபடி செய்து வந்தோம். 

காட்டுப்பன்றிகளால் பாதிப்பு, நிலையான விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் இச்சாகுபடியை தவிர்த்து வந்தோம். கிணறு, போர்வெல்களில் நிலையான நீர் மட்டம் இருப்பதால் நிலக்கடலை விதைப்பு செய்துள்ளோம். விதை கடலை கிலோ 100 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனையாகிறது என்றனர்.
Tags:    

Similar News