உள்ளூர் செய்திகள்
.

சேலம் அருகே கார் மோதி இளம்பெண் பலி

Published On 2022-01-21 07:51 GMT   |   Update On 2022-01-21 07:51 GMT
சேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் இளம்பெண் பலியானார்.
காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 27). இவருடைய மனைவி தமிழ்செல்வி (24). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
 
தமிழ்செல்வியின் தந்தை கோவிந்தராஜ் (55) நேற்று இரவு  மொபட்டில் தனது மகளையும், 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஓமலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கோட்டமேட்டுப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை குறுக்கே மொபட்டை திருப்பியது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு கார்  மொபட் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தமிழ்செல்விக்கு முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த அடிபட்டது. இவரது 2 குழந்தைகள்  மற்றும் கோவிந்தராஜ் லேசான காயம் அடைந்தனர். தனது கண் எதிரே  மகள் தமிழ்செல்வி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடுவதை கண்டு கோவிந்தராஜ்  கதறி அழுதார்.  

அவர்களை பொதுமக்கள் மீட்டு ஓமலூர் அரசு  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் செல்லும் வழியிலேயே தமிழ்செல்வி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து அவருடைய குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுததை பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது.

இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி காரை ஓட்டிய கர்நாடக மாநிலம் பெங்களூரு திகூர் மெயின்ரோட்டை சேர்ந்த சுராஜி என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News