உள்ளூர் செய்திகள்
இலவச வெள்ளாடு வழங்கும் திட்டம் - தயாராகும் பயனாளிகள் பட்டியல்
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இம்மாத இறுதிக்குள் பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்படும்.
உடுமலை:
உடுமலை கோட்டத்தில் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஆகிய ஒன்றியங்களில் தலா 100 பெண் பயனாளிகளை தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் 5 ஆடுகள் வழங்கப்படவுள்ளது.
இதற்காக அந்தந்த ஒன்றியங்களில் உள்ள கால்நடை மருந்தகங்கள் வாயிலாக பெண் பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. அவற்றில் தகுதியான பயனாளிகளை கால்நடை உதவி இயக்குனர் தலைமையிலான 4 பேர் அடங்கிய குழுவினர் தேர்வு செய்தும் வருகின்றனர்.
இது குறித்து கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஜெயராம் கூறுகையில்:
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இம்மாத இறுதிக்குள் பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்படும். இதையடுத்து அடுத்த மாதம் அருகில் உள்ள சந்தைகளில் இருந்து பயனாளிகளின் விருப்பப்படி 4 பெட்டை ஆடு, ஒரு கிடா ஆடு கொள்முதல் செய்யப்படும். இதற்கான நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது என்றார்.