உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

சத்திரம் பஸ் நிலைய கடைகள் இன்று ஏலம் தள்ளிப்போட கோரிக்கை விடுத்ததால் பரபரப்பு

Published On 2022-01-20 09:30 GMT   |   Update On 2022-01-20 09:30 GMT
சத்திரம் பஸ் நிலைய கடைகளின் ஏலத்தை தள்ளிப்போட கோரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி:

திருச்சி மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.28 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை கடந்த மாதம் 30-ந் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சத்திரம் பஸ் நிலையத்தில் 54 புதிய கடைகள், ஓட்டல், நவீன கழிப்பிடம், இருசக்கர வாகன நிறுத்தும் இடம் என அமைக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் மாதாந்திர வாடகை அடிப்படையில் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (வியாழக்கிழமை) காலை 11.45 மணிக்கு, மாநகராட்சி மைய அலுவலகத்தில், ஆணையர் முஜிபுர் ரகுமான் முன்னிலையில் பொது ஏலம் தொடங்கியது.

மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட வாடகைக்கு குறையாமல் உச்சபட்ச ஏலத்தொகை இருக்கும் பட்சத்தில் ஏற்கனவே கடை வைத்திருந்தவர் களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாநகராட்சி வளாகத்தில் திரண்டனர். 

இதையடுத்து பிரச்சினைகளை தவிர்க்க உதவி போலீஸ் கமிஷனர் அஜய் தங்கம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது ஏலம் நடந்து கொண்டிருக்கும் போது, காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாவட்ட பொதுச் செயலாளர் ஆர். ராஜா வந்தார். 

பின்னர் அவர் நுழைவுவாயில் பகுதியில் இருந்த அதிகாரிகளிடம் நானும் கடை எடுப்பதற்கு விண்ணப்பம் கொடுத்திருந்தேன். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்வதால் இந்த ஏலத்தில்  பங்கேற்கவில்லை. அதிகாரிகள் ஏலத்தை தள்ளிவைக்க வேண்டும் என்றார்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் அவர் கூறும்போது, தமிழகத்தில் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக அறிவிப்பு வெளியான மறுநாள் ஏல தேதி அறிவிக்கப்பட்டு அவசர அவசரமாக ஏலம் விடப்படுகிறது. ஏலத்தை தள்ளிவைக்க ஏற்கனவே மாநகராட்சியில் மனு அளித்தேன். ஆனால் எந்த பதிலும் இல்லை. எனக்கு உயிர் தான் முக்கியம். ஏலம் எடுக்கும் நிலையில் வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பித்து கடையை மூடி விடுவார்கள் என்றார். 

Tags:    

Similar News