உள்ளூர் செய்திகள்
தாளடி நெற்பயிர் வயல்கள்.

சல்பேட் உரம் கிடைக்காததால் விவசாயிகள் அவதி

Published On 2022-01-20 08:43 GMT   |   Update On 2022-01-20 08:43 GMT
பூதலூர் வட்டாரத்தில் சல்பேட் உரம் கிடைக்காததால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பூதலூர்:

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் நடப்பாண்டில் 16,000 ஏக்கரில் 
சம்பா நெற்பயிரும், 12 ஆயிரம் ஏக்கரில் தாளடி சாகுபடி 
செய்யப்பட்டுள்ளன. 

தொடர்ந்து பெய்த பெருமழையில் விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கிடையே பயிரை நல்ல முறையில் பராமரித்து வந்து கொண்டுள்ளனர்.

தற்போது பின்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் 
தண்டு உருளும் தருணத்தில் உள்ளன. இந்த தருணத்தில் பயிர்களுக்கு 
மிகவும் அவசியமாக சல்பேட் உரம் போட வேண்டும். 

ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை சல்பேட் போட்டால் பயிர்களில் வாளிப்பான், வளமான நெற்கதிர்கள்உருவாகும் என்பதால் விவசாயிகள் சல்பேட் உரம் போடுவதை விரும்புகின்றனர். 

சல்பேட் உரம் போடுவதால் மகசூல் நல்ல முறையில் இருக்கும் 
என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

இதுபோன்ற சூழ்நிலையில் பூதலூர் மற்றும் திருக்காட்டுப் பள்ளி 
பகுதிகளில் சல்பேட் உரம் முழுமையாக உரக் கடைகளில் இருப்பு 
இல்லை என்று கூறுகின்றனர். விவசாயிகள் சல்பேட் உரத்திற்காக 
ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி வருகின்றனர்.

திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் பகுதிகளில் உள்ள தனியார் 
உர கடைகள் எதிலும் சல்பேட் உரம் இருப்பு இல்லை என்று 
கூறுகின்றனர். 

திருக்காட்டுப்பள்ளியில் சில கடைகளில் ரகசியமாக கூடுதல் 
விலைக்கு விற்கப் படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
 
சல்பேட்டிற்கு பதிலாக யூரியாவில் மணல் கலந்து தெளிக்கலாம் 
தனியார் வேளாண் ஆலோசகர்ஒருவர் தெரிவித்தபோதும், 
பெரும்பாலான விவசாயிகள் இதை ஏற்காமல் சல்பேட் உரத்தை தேடி அலைந்து கொண்டு உள்ளனர். 

அதே போல அம்மோனியம் உரத்திற்கும் தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

வேளாண்மைத் துறை பூதலூர் மற்றும் திருக்காட்டுப்பள்ளி பகுதி விவசாயிகளின் நிலைமையை ஆய்வு செய்து சல்பேட் உரம் 
தாராளமாக, சரியான தருணத்தில் கிடைக்க ஆவண செய்ய 
வேண்டும் என்று பூதலூர் பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
Tags:    

Similar News