உள்ளூர் செய்திகள்
விழுப்புரத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
விழுப்புரத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் ஜானகிபுரத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தர்மகர்த்தாவாக சரவணன் உள்ளார். நேற்று முன்தினம் மாலை கோவிலில் பூஜை முடிந்ததும் கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை அந்த கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள், தர்மகர்த்தா சரவணனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் விரைந்து வந்து பார்த்தபோது கோவில் பிரகாரத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கை பணம் கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார், அந்த கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. அந்த உண்டியலில் சுமார் ரூ.5 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.