உள்ளூர் செய்திகள்
திருச்சி தொழிலதிபர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்
திருச்சி:
திருச்சி வயலூர் ரோடு அம்மையப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 40), தொழிலதிபரான இவரது மனைவி ஜெயஸ்ரீ (35). இவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதே பகுதியில் தங்களது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் இவர்களின் சொந்த ஊரான பொன்னமராவதி அருகே உள்ள கிராமத்திற்கு குடும்பத்துடன் புறப்பட்டனர். இதற்காக சண்முகம் கடந்த 13&ந்தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதையடுத்து நேற்று இரவு மீண்டும் வீட்டிற்கு சண்முகம் வந்துள்ளார்.
அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் உள்ள லாக்கர்களும் உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த துணிகள் வீட்டின் உள்ளே சிதறிக்கிடந்தன.
மேலும் பீரோவில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு 2, 45 பவுன் நகை, செல்போன் 2, பணம் ரூ.15,000 மேலும் தங்க மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தது.
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலை யத்திற்கு தகவல் கொடுக்கப் பட்டது. தகவலின் அடிப்படையில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரனை நடத்தினார்கள்.
வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றிருந்ததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள் தான் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.