உள்ளூர் செய்திகள்
கமுதியில் கண்மாய் மடையில் சிக்கிய சகோதரர்கள் மீட்பு
கமுதியில் கண்மாயில் மீன் பிடித்த சகோதரர்கள் தவறி விழுந்து கண்மாய் மடையில் சிக்கினர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அல்லாபிச்சை தெருவை சேர்ந்தவர் முகைதீன் அப்துல்காதர். இவரது மகன்கள் சந்தோஷ் ரகுமான் (வயது24), அப்துல் கலாம் (20).
இருவரும் நேற்று முழு ஊரங்கு என்பதால் பெரிய தர்கா பின்புறமுள்ள கண்மாய் பகுதியில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது கண்மாய் கரையில் உள்ள தண்ணீர் செல்லும் மடை பகுதி எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்தது.
இதனால் மீன் பிடித்துக்கொண்டிருந்த இருவரும் மடையின் கதவு பகுதியில் விழுந்து சிக்கி அதில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்தனர்.
இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கமுதி டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மடையில் சிக்கிய சகோதரர்களை மீட்டனர். பின்பு அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.