உள்ளூர் செய்திகள்
ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

கொரோனா உயிரிழப்பு- சென்னையில் இதுவரை 3638 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம்

Published On 2022-01-02 15:59 GMT   |   Update On 2022-01-02 15:59 GMT
சென்னையில் இதுவரை வருவாய்த்துறை அலுவலர்கள் களஆய்வு மேற்கொண்டும். பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்தும் 6888 விண்ணப்பங்கள் இணைய வழியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை மாவட்ட கலெக்டர் விஜயா ராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.50 ஆயிரம்  நிதி உதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு தமிழக அரசின் நிதி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியிடம் உள்ள பதிவுகளின் படி 8348 நபர்கள் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

இதுவரை வருவாய்த்துறை அலுவலர்கள் களஆய்வு மேற்கொண்டும். பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்தும் 6888 விண்ணப்பங்கள் இணைய வழியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அனைத்து ஆவணங்களும் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்ட 3638 நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் மின்னனு பரிவர்த்தனை மூலம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம்  https://chennai.nic.in/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மீதமுள்ள விண்ணப்பங்கள் வாரிசு மற்றும் சட்ட ரீதியான பிரச்சனைகள் காரணமாகவும், முழுமையான முகவரி இல்லாததனாலும், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதாலும், கள ஆய்வின்போது வேறு முகவரிக்கு குடிபெயர்ந்து சென்றதாலும், மக்களாகவே முன்வந்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இனங்களில் முழுமையாக மருத்துவ ஆவணங்கள் சமர்ப்பிக்காததாலும் அரசு வழங்கும் நிதி உதவியினை வழங்க இயலாத நிலை உள்ளது. 

எனவே கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக 7வது மாடியிலுள்ள பேரிடர் மேலாண்மை பிரிவிலோ அல்லது 1077 என்ற இலவச எண்ணையோ அல்லது கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர்களையோ தொடர்பு கொண்டோ கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதற்கான ஆவணம், மருத்துவ சிகிச்சைக்கான ஆவணங்கள், மயான சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ். வங்கி கணக்கு விவரம் போன்ற முழுமையான ஆவணங்களுடன் தாக்கல் செய்து ரூ.50 ஆயிரம் நிதி உதவியினை பெறலாம். 



18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களில் ஒருவரை இழந்தோர், அல்லது இருவரையும் இழந்தோர், முறையே ரூ.3 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் பெற்றவர்களும், மேற்படி ரூ.50 ஆயிரம் பெற தகுதியுடையவா;கள் என்பதால் அவர்களோ அல்லது அவர்களது பாதுகாவலர்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News