உள்ளூர் செய்திகள்
நேப்பியர் பாலம் பகுதியில் மழை

சென்னை, புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

Published On 2021-12-30 11:35 GMT   |   Update On 2021-12-30 11:35 GMT
சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், நண்பகல் முதல் மழை பெய்கிறது.
சென்னை:

தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நண்பகலில் நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதன்பின்னர் விட்டு விட்டு மழை பெய்கிறது.

மாலையில் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த மழையின்போது சேதமடைந்த சாலைகளில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட நிலையில், இன்று பெய்த மழையால், அந்த பகுதிகள் சேறும் சகதியுமாக மாறியது. ஒரு சில சாலைகளில் வாகன ஒட்டிகள் சிரமம் அடைந்தனர். இதேபோல் சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்தது. 
Tags:    

Similar News