உள்ளூர் செய்திகள்
அரசு பஸ் மோதியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
சம்பவ இடத்திற்கு காங்கயம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
காங்கயம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு அரசு விரைவு பஸ் சென்றது. காங்கயம் பஸ் நிலையத்திற்குள் வந்த போது திடீரென தாறுமாறாக ஓடிய பஸ், அங்கு நின்று கொண்டிருந்த வடமாநில தொழிலாளி ஒடிசாவை சேர்ந்த பட்நவிக் (வயது 42) என்பவர் மீது மோதியது.
இதில் அவரது 2 கால்களும் துண்டானது. இதையடுத்து டிரைவர்,கண்டக்டர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு காங்கயம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும் காயமடைந்த பட்நவிக்கை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பட்நவிக் இறந்தார்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி டிரைவர் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை சேர்ந்த குமாரசாமியை கைது செய்தனர்.