உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பல்லடம் அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-12-27 09:09 GMT   |   Update On 2021-12-27 09:09 GMT
கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள இலவந்தி கிராமம் அக்ரானம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா (வயது30). இவரது மனைவி தனலட்சுமி(22). இவர்களுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 1 வயது மற்றும் 3 வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். 

சிவா பொக்லைன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் சிவா வேலை விஷயமாக வெளியே சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த தனலட்சுமி குழந்தைகள் தூங்கிய பின்பு சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

குழந்தைகள் தூங்கி எழுந்ததும் அம்மாவை அழைத்துள்ளனர். அவர் வராததால் அழத் தொடங்கினர். குழந்தைகளின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கம் வசிப்பவர்கள் சென்று பார்த்தபோது தனலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து கணவர் சிவா மற்றும் காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News