உள்ளூர் செய்திகள் (District)
கொலை

கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மகனை கொன்ற தந்தை

Published On 2021-12-27 05:18 GMT   |   Update On 2021-12-27 05:18 GMT
நெல்லையில் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மகனை கொன்ற தந்தையை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள ஆமீன்புரம் 2-வது தெருவை சேர்ந்தவர் அப்துல்லா. இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இவரது மகன் அப்துல் ரகுமான்(வயது 27). இவர் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இவருக்கு மது மற்றும் கஞ்சா பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இவர் அடிக்கடி மதுபோதையில் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் குடிப்பதற்கு பணம் கேட்டும் தினமும் தகராறு செய்து வந்துள்ளார். இன்று அதிகாலை தந்தை, மகன் ஆகிய 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றவே அப்துல் ரகுமான், தந்தை என்று கூட பாராமல் அப்துல்லாவை தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல்லா பதிலுக்கு மகனை தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார்.

பின்னர் வீட்டில் இருந்த கிரைண்டர் குழவி கல்லை எடுத்து அப்துல் ரகுமானின் தலையில் போட்டு தாக்கி உள்ளார். இதனால் அலறித்துடித்த அப்துல் ரகுமான் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

உடனே அப்துல்லா, மேலப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

அப்துல் ரகுமான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

தகவல் அறிந்த உதவி கமி‌ஷனர் பாலமுருகனும் அங்கு வந்து விசாரித்தார். அதில் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் மகனை, அப்துல்லா கொன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக அப்துல்லாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News