உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பருத்தி விதை உற்பத்தி - விதைச்சான்றுத் துறை இயக்குனர் ஆய்வு

Published On 2021-12-25 05:46 GMT   |   Update On 2021-12-25 05:46 GMT
தமிழகத்தில் 20 ஆண்டுக்கு முன் வரை பருத்தி சாகுபடி பரப்பு 1.40 லட்சம் ஹெக்டேராக இருந்தது. தற்போது 70 ஆயிரம் ஹெக்டேராக குறைந்துள்ளது.
குடிமங்கலம்:

உடுமலை, குடிமங்கலம் பொன்னேரியில் சைமா பருத்தி ஆராய்ச்சி நிலையம் கடந்த 47 ஆண்டுகளாக பருத்தி உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் மாநிலம் முழுவதும், 500 ஏக்கர் வரை விதைப்பண்ணைகள் அமைத்து 4 ஆயிரம் குவிண்டால் பருத்தி கொள்முதல் செய்கிறது.

இதில் இருந்து 150 டன் சான்று பெற்ற விதையும், 1,300 குவிண்டால் பஞ்சும் உற்பத்தி செய்து வினியோகம் செய்து வருகின்றனர்.

இந்நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் ஆராய்ச்சி குறித்து விதைச்சான்று மற்றும் அங்ககசான்று இயக்குனர் சுப்பையா ஆய்வு செய்தார்.

சைமா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பருத்தி ரகங்களான சைமா பிளாட்டினா, சைமா 5, கவின், சுரபி மற்றும் நீண்ட இழை பருத்தி ரகங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி குறித்து கள ஆய்வு செய்தார். மேலும்  தரமான விதை உற்பத்தியை உறுதி செய்ய அறிவுறுத்தினார்.

அவர் கூறியதாவது:

தமிழகத்தில்20 ஆண்டுக்கு முன் வரை பருத்தி சாகுபடி பரப்பு 1.40 லட்சம் ஹெக்டேராக இருந்தது. தற்போது 70 ஆயிரம் ஹெக்டேராக குறைந்துள்ளது. இதனால் பஞ்சு சார்ந்த தொழிற்சாலைகள், நூற்பாலைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

பொதுவாக நீண்ட இழை பருத்தி உற்பத்தி செய்யக்கூடிய பருத்தி ரகங்கள் 210 நாட்கள் வாழ்நாள் உள்ளதால் விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். 

எனவே குறைந்த சாகுபடி காலத்தை கொண்ட நீண்ட இழை பருத்தி ரகங்களாகவும், நோய் எதிர்ப்பு சக்தி உள்ள ரகங்களை கண்டறிந்து சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், இயற்கை முறையில் சாகுபடி மேற்கொள்ளவும் ஊக்குவிக்க வேண்டும் என்றனர். 

அப்போது பருத்தி ஆராய்ச்சியாளர் ஆஷா, விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம், உதவி இயக்குனர் மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News