உள்ளூர் செய்திகள்
வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் தவித்த சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகரன் அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினார்.
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு போக்குவரத்து போலீசார் போயம்பாளையம் சந்திப்பில் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது 7 வயது சிறுவன் ஒருவன் சாலையில் தனியாக நின்று அழுது கொண்டு,வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
அப்போது அந்த வழியாக சென்ற திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகரன் அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினார். இதில் அவன் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவன் என்பதும், தனது அண்ணனுடன் வந்தபோது வழிமாறி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் இன்ஸ்பெக்டர் கூறினார். பின்னர் போலீசார் அந்த சிறுவனை அழைத்து மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.