உள்ளூர் செய்திகள்
2022-ம் ஆண்டுஅரவை குறித்து கரும்பு விவசாயிகள் ஆலோசனை
அரவைக்காக விவசாயிகளிடம் பெறப்படும் கரும்பு பரப்பளவை அதிகப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
உடுமலை:
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை, திருப்பூர், திண்டுக்கல் என 3 மாவட்டங்களில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது.
உடுமலை, ஆலைப்பகுதி, குமரலிங்கம், கணியூர், பல்லடம், நெய்க்காரபட்டி, பழனி கிழக்கு, பழனி மேற்கு என 8 கோட்டங்களை உள்ளடக்கிய விவசாயிகளிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்புகள் பெற்று இந்த ஆலை இயங்கி வருகிறது.
2022-ம் ஆண்டு மார்ச் மாதம் நடப்பாண்டின் அரவை தொடங்க உள்ள நிலையில் கரும்பு விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் ஆலை வளாகத்தில் நடைபெற்றது.
இதில் ஏற்கனவே விவசாயிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகள் குறித்தும், அரவைக்காக விவசாயிகளிடம் பெறப்படும் கரும்பு பரப்பளவை அதிகப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் கரும்பு வெட்ட கூலி ஆட்களை வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவசாயிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
கூட்டத்துக்கு தனி அலுவலர் பவுல் பிரின்ஸ் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சி.சண்முகவேலு, இரா.ஜெயராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.