திருச்சி அருகே இன்று காலை விபத்து: கணவன்-மனைவி பலி
திருச்சி:
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த காணக் கிளியநல்லூர் அருகே உள்ள வந்தலை கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் (வயது 65). இவரது மனைவி ஆர்க்கினேஸ் மேரி (60).
இந்த நிலையில் இவர்கள் இருவரும் இன்று காலை சொந்த வேலை காரணமாக வந்தலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பனமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் அதே சாலையில் மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஜோசப், ஆர்க்கினேஸ் மேரி இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய டிரைவர் அந்த இடத்திலேயே காரை நிறுத்தி விட்டு தப்பிவிட்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விபத்தில் மரணம் அடைந்த கணவன், மனைவி உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய டிரைவரை தேடி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.