உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

இலவச வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் - பயனாளிகளை தேர்வு செய்ய குழு அமைப்பு

Published On 2021-12-10 09:14 GMT   |   Update On 2021-12-10 09:14 GMT
ஏழை விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண், ஆதரவற்ற விதவை மட்டுமே தகுதியான பயனாளிகள் ஆவர்.
உடுமலை:

கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் இலவச வெள்ளாடு வழங்கும் திட்டம் உள்ளது. அவ்வகையில் நடப்பாண்டு ஊராட்சி ஒன்றியங்களில் 100 பெண் பயனாளிகளை தேர்வு செய்து தலா 5 ஆடுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இதற்கு ஏழை விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண், ஆதரவற்ற விதவை மட்டுமே தகுதியான பயனாளிகள் ஆவர். தவிர 60 வயதுக்கு உட்பட்டவராகவும் சொந்தமாக நிலம் மற்றும் கால்நடைகள் இல்லாதவராகவும் ஏற்கனவே இத்திட்டத்தில் பயன் அடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.

அவ்வகையில் உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியங்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகங்களில் பெண் பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பெறப்பட்ட விண்ணப்பங்களில்  தகுதியான பயனாளிகளைத் தேர்வு செய்யும் வகையில் 5 பேர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழுவில் கால்நடை உதவி இயக்குனர், கால்நடை உதவி டாக்டர், பி.டி.ஓ., கால்நடை பல்கலை உதவிப்பேராசிரியர், ஒன்றிய அளவிலான மகளிர் திட்ட அலுவலர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

கால்நடைத்துறை உடுமலை கோட்ட உதவி இயக்குனர் ஜெயராம் கூறுகையில், தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இம்மாத இறுதிக்குள் முறையாக பரிசீலிக்கப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு சந்தைகள் வாயிலாக இலவச வெள்ளாடுகள் வழங்கப்படும் என்றனர்.
Tags:    

Similar News