உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,500 கன அடியாக அதிகரிப்பு

Published On 2021-12-05 04:06 GMT   |   Update On 2021-12-05 04:06 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணை நீர்மட்டம் கடந்த 22 நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது.
மேட்டூர்:

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று விநாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலையில் 13 ஆயிரத்து 500 கன அடியாக இருந்தது.

இதனிடையே மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதி மற்றும் பாலாறு பகுதியில் பெய்த மழையினால் நேற்று மாலையில் நீர்வரத்து 17 ஆயிரத்து 400 கன அடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து விநாடிக்கு 17 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த 14-ந் தேதி முதல் அப்படியே காவிரி மற்றும் கால்வாயில் வெளியேற்றப்படுகிறது. அதன்படி இன்றும் அணையில் இருந்து காவிரியில் 17 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணை நீர்மட்டம் கடந்த 22 நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது. இதனால் மேட்டூர் அணை தொடர்ந்து கடல் போல காட்சி அளிக்கிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீரை 24 மணி நேரமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News