உள்ளூர் செய்திகள்
தமிழில் திறனறி தேர்வு - திருப்பூர் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டத்தில் ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளி மையத்தில் 47 மாணவர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர்:
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரசார் நிறுவனம், பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவியல் ஆராய்ச்சிகளில் மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
இதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் தேசிய அளவிலான அறிவியல் திறனறி தேர்வு நடத்துகிறது. நடப்பாண்டு தேர்வு நவம்பர் 24-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. 6-ம்வகுப்பு முதல் பிளஸ்-1 வரையிலான மாணவர்கள் ஸ்மார்ட் போன், லேப் டாப் அல்லது கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் தேர்வெழுதினர்.
பள்ளிகளில் குறைந்தபட்சம் 10 மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், அப்பள்ளி தேர்வு மையமாக அமைக்கப்படும். இதன் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளி மையத்தில் 47 மாணவர்கள் பங்கேற்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா கூறுகையில்:
இந்தாண்டு தமிழ் மொழியிலும் இத்தேர்வு நடத்தப்படுவதால் தமிழக மாணவர்களுக்கு இது பெரிதும் பயனளிக்கும். தேசிய அளவிலும் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதும் வாய்ப்பு தற்போது உள்ளது என்றார்.