உள்ளூர் செய்திகள்
வானிலையின் தற்போதைய நிலவரப் படம்

கன்னியாகுமரி, நெல்லையில் நாளை கனமழை எச்சரிக்கை

Published On 2021-12-03 08:18 GMT   |   Update On 2021-12-03 08:18 GMT
அந்தமான் அருகே உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரடைந்துள்ளதை அடுத்து இன்னும் 6 மணி நேரத்தில் புயலாக மாற இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தெற்கு அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

தற்போது வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்னும் 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் எனவும், இது வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதன் எதிரொலியால், தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல்,  சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வரும் 7-ம் தேதி முதல் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News