உள்ளூர் செய்திகள்
நூல் விலையை மேலும் குறைக்க வேண்டும் - ஆடை உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
நேற்று கிலோவுக்கு ரூ.10மட்டும் நூல் விலையை குறைத்து நூற்பாலைகள் அறிவித்துள்ளன.
திருப்பூர்:
பருத்தி பஞ்சு விலை உயர்வால் தமிழக நூற்பாலைகள் நூல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அதிகபட்சமாக கடந்த நவம்பர் 1-ந்தேதி ஒசைரி நூல் கிலோவுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டது. 2020 நவம்பர் முதல் நடப்பு ஆண்டு நவம்பர் வரை கிலோவுக்கு ரூ.112 விலை உயர்ந்துள்ளது.
பஞ்சு, நூல் விலையை குறைக்க கோரி திருப்பூரில் அனைத்து பின்னலாடை தொழில் அமைப்பினர் கடந்த 26-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் நேற்று கிலோவுக்கு ரூ.10மட்டும் நூல் விலையை குறைத்து நூற்பாலைகள் அறிவித்துள்ளன. பருத்தி சீசன் துவங்கியுள்ளதால் வரும் மாதங்களில் நூல் விலை மேலும் குறைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு ஆடை உற்பத்தியாளர் மத்தியில் எழுந்துள்ளது. இதனிடையே நூல் விலையை ரூ.50ஆக குறைக்க வேண்டும் என திருப்பூர் பின்னலாடை துறையினர் எதிர்பார்க்கின்றனர்.