உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு

Published On 2021-12-02 05:25 GMT   |   Update On 2021-12-02 05:25 GMT
கொல்கத்தாவில் இருந்து 19 பேரை அழைத்து வந்து பனியன் நிறுவனங்களில் தங்க வைத்து வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
திருப்பூர்:

திருப்பூர் லட்சுமி நகர் பிரிட்ஜ்வே காலனி விரிவு பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் 14 வயதுக்கு குறைவான குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றுவதாக சைல்டுலைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. 

இதைத் தொடர்ந்து குழந்தை தொழிலாளர் நலத்துறையினர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், சைல்டுலைன் அமைப்பினர் சம்பந்தப்பட்ட பனியன் நிறுவனத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

இதில் அங்கு குழந்தை தொழிலாளர்கள் 6 பேர் தங்கியிருந்தது தெரியவந்தது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் அந்த பனியன் நிறுவனத்தை நடத்தி வருவதும், கொல்கத்தாவில் இருந்து 19 பேரை அழைத்து வந்து பனியன் நிறுவனங்களில் தங்க வைத்து வேலை செய்து வருவதும் தெரியவந்தது. 

அங்கிருந்த 6 குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டு சம்பந்தப்பட்ட பனியன் நிறுவன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மீட்கப்பட்ட சிறுவர்களை திருமுருகன்பூண்டியில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்து பின்னர் சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்திற்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் அந்த நிறுவனத்தில் திருப்பூர் வடக்கு தாசில்தார் ஜெகநாதன் மற்றும் காவல்துறையினர் கூட்டாய்வு ஆய்வு செய்து அந்த நிறுவனத்தில் 14 வயதுக்கு மேல் 18 வயதுக்கு கீழ் உள்ள மேலும் 5 பேரை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தினர். 4 நாட்களில் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News