செய்திகள்
செல்போன் திருடப்பட்ட விவகாரம் லாரி டிரைவரை கடத்தி தாக்கிய 3 பேர் கைது
லாரி டிரைவர் ராஜேந்திரன் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 52). இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் குடியிருந்து கொண்டு சொந்தமாக லாரி வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். காரணம்பேட்டையை சேர்ந்த ராஜேந்திரன்(38)என்பவர் கடந்த சில நாட்களாக சிவக்குமாரிடம் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் லாரி டிரைவரான ராஜேந்திரன் லாரிஅதிபர் சிவக்குமாரிடமிருந்து ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் விலையுயர்ந்த செல்போன் ஒன்றை திருடிவிட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிவகுமாரின் மகன் அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் உள்பட 3பேர் லாரி டிரைவர் ராஜேந்திரன் வீட்டிற்குச் சென்று அங்கிருந்த ராஜேந்திரனை கடத்திச் சென்றனர். பின்னர் அங்குள்ள அறையில் கட்டி வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கிருந்து தப்பிய லாரி டிரைவர் ராஜேந்திரன் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். உடல் முழுக்க காயங்களுடன் இருந்த அவருக்கு அரசு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் படுகாயமடைந்த ராஜேந்திரன் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் லாரி அதிபர் சிவகுமாரின் மகன் அருண்குமார், அவரது நண்பர்கள் குணசேகரன், சந்துரு ஆகிய 3பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை திருப்பூர் கிளை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.