செய்திகள்
21 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது- திருப்பூர் உப்பாறு அணையில் இருந்து உபரிநீர் திறப்பு
உப்பாறு அணை மூலம் 6059 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக அணை முழு கொள்ளளவான 24 அடியை எட்டியது. கடந்த 21 ஆண்டுகளுக்கு பின் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உப்பாறு அணை மூலம் 6059 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் உப்பாறு அணை 13 அடியை தாண்டி நிரம்பியதில்லை. இதனால் தாராபுரம் தாலுகாவில் உள்ள நஞ்சியம்பாளையம், தும்பலப்பட்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது.
இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக பி.ஏ.பி., அரசூர் ஷட்டர் வழியாக உப்பாறு அணைக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் உப்பாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான குண்டடம், வாகைத்தொழுவு, கேத்தனூர், பாப்பனூத்து உள்ளிட்ட பகுதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக மொத்த உயரமான 24 அடியை எட்டியது.
இதையடுத்து நேற்றிரவு அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. உபரிநீர் உப்பாறு ஓடை வழியாக வெளியேறி வருகிறது. அணையில் உபரிநீர் திறப்பதை காண சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் விசில் அடித்தும் , ஆரவாரம் செய் தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.