செய்திகள்
மாட்லாம்பட்டியில் பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலி பறிக்க முயன்றவர் கைது
மாட்லாம்பட்டியில் பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலி பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம்:
காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலன். இவருடைய மனைவி அமுதா (வயது 40). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் திடீரென அமுதா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அமுதா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து நகை பறித்து கொண்டு தப்பியோட முயன்ற நபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் காரிமங்கலம் போலீசுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் நகை பறிக்க முயன்றவர் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (42) என்பது தெரியவந்தது. பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த அவரை போலீசார் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் சண்முகத்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.