செய்திகள்
கோப்புபடம்

மண் வளத்திற்காக குடிமங்கலம் பகுதியில் சணப்பை சாகுபடி

Published On 2021-11-11 04:40 GMT   |   Update On 2021-11-11 04:40 GMT
சணப்பு பயிரின் ஆணி வேர்கள் மண்ணில் ஆழத்துக்கு ஊடுருவி நீர் மற்றும் காற்று எளிதில் மண்ணில் புகும்படி செய்கிறது.
குடிமங்கலம்:

குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தென்னை விவசாயம் அதிகளவில் நடைபெற்று வரும் நிலையில் தக்காளி, வெண்டை, கத்தரிக்காய், மிளகாய் உள்ளிட்ட காய்கறி பயிர்களும் கிணற்று பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் விவசாயிகள் மண்ணை வளப்படுத்துவதற்காக பயிர் சாகுபடிக்கு முன் சணப்பை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். சணப்பை காற்றில் உள்ள தழைச்சத்தை தனது வேர் முடிச்சுகளில் உள்ள நுண்ணுயிர்கள் மூலம் சேமிக்கும் தன்மை கொண்டது. 

விதைத்த 45 நாட்களில் சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு வேகமாக வளர்ந்து ஏக்கருக்கு 4 முதல் 5 டன் தழை உரத்தையும் சுமார் 15 கிலோ தழைச்சத்து தரும் தன்மையும் கொண்டது. சணப்பு பயிரின் ஆணி வேர்கள் மண்ணில் ஆழத்துக்கு ஊடுருவி நீர் மற்றும் காற்று எளிதில் மண்ணில் புகும்படி செய்கிறது.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:

தென்னை மரங்களை சுற்றி இரண்டு மீட்டர் தூரத்திற்கு சணப்பை சாகுபடி செய்து வருகிறோம். இதன் காரணமாக தென்னந்தோப்புகளில் மண் பிடிமானம் அதிகமாகி மேல் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. சணப்பை மிகவும் வேகமாக வளரும் என்பதால் தென்னை மரங்களை சுற்றி வளரும் களை வளர்ச்சியை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்க செய்கிறது. 

சணப்பை மற்ற பயிருடன் உரத்திற்காக போட்டியிடாது வளரும் தன்மை கொண்டது. அனைத்து வகை மண்ணிலும் நன்கு வளரக் கூடியது. இதனால் மண்ணை வளப்படுத்துவதற்காக சணப்பை சாகுபடி செய்கிறோம். மேலும் விவசாய நிலங்களிலும் சணப்பை சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News