செய்திகள்
நீடாமங்கலத்தில் முன்விரோதத்தில் வாலிபரை தாக்கியவர் கைது
நீடாமங்கலத்தில் முன்விரோதத்தில் வாலிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய 4 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பூவனூர் கிராமம் உள்ளது. இங்கு அக்ரஹார பூவனூர் பகுதியில் வசித்து வரும் விசுவநாதன் மகன் கலைமணி (வயது32). இவருக்கும், பூவனூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (38) குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று கலைமணி நீடாமங்கலம் வந்துவிட்டு, பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ராஜ்குமார் மற்றும் சிலர் கலைமணியை காரில் அழைத்து சென்று நீடாமங்கலம் ரெயில் நிலைய பகுதியில் வைத்து கம்பியால் தாக்கினர்.
இதில் காயமடைந்த கலைமணி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தேவதாஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பூவனூரை சேர்ந்த ராமமூர்த்தி (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய பூவனூரை சேர்ந்த ராமமூர்த்தியின் அண்ணன் ராஜ்குமார், மனோஜ், அரவூரை சேர்ந்த சேனாதிபதி, பகலவன் ஆகிய 4 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.