செய்திகள்
முல்லைப் பெரியாறு அணையில் மேலும் இரண்டு மதகுகள் திறப்பு
முல்லைப் பெரியாறு அணையின் மதகுகள் திறக்கப்பட்டதில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இன்று மேலும் இரண்டு மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரளாவிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. 139 அடியை நெருங்கிய நிலையில் இரண்டு மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது. வெளியேறும் தண்ணீர் கேரள மாநிலம் இடுக்கி சென்றடையும்.
மதகுகள் திறக்கப்படும்போது, கேரள மாநில அமைச்சர் அருகில் இருந்தார். முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கேரள அரசு எப்படி தண்ணீர் திறக்க முடியும். அணை யார் கட்டுப்பாட்டில் உள்ளது?. 142 அடி நிரம்புவதற்கு முன் தண்ணீர் திறக்கப்பட்டதால் தமிழகத்தின் ராமநாதபுரம் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என விமர்சனம் எழுந்தது.
இதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். என்றாலும், அதை ஏற்காமல் வருகிற 9-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மேலும் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 8 மதகுகள் திறக்கப்பட்டு 3,981 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் கேரளாவிற்கு செல்கிறது.