செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாளில் 2 அடி உயர்வு

Published On 2021-10-20 03:40 GMT   |   Update On 2021-10-20 03:40 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 16 ஆயிரத்து 12 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 15 ஆயிரத்து 409 கன அடியாக சரிந்தது.
மேட்டூர்:

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து தமிழக- கர்நாடக எல்லையை கடந்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது.

ஒகேனக்கல்லில் விநாடிக்கு 16 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிகளில் குளிக்க அனுமதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 16 ஆயிரத்து 12 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 15 ஆயிரத்து 409 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரியில் 100 கன அடி தண்ணீரும், கால்வாயில் 550 கன அடி தண்ணீரும் என மொத்தம் 650 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 91.32 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 92.44 அடியானது. இன்று மேலும் ஒரு அடி உயர்ந்து 93.50 அடியாக உயர்ந்தது. இதனால் 2 நாட்களில் 2 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News